இந்தியாவின் மாபெரும் வணிக சாம்ராஜியங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவர் தான் கெளதம் அதானி. சமீபத்திய ஆண்டுகளாக இந்தியாவின் மற்றொரு பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியை காட்டிலும் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 1 ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, உலகின் 4 வது பில்லியனராகவும் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளார்.
பின்னுக்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்
கடந்த வாரத்தில் லாப நோக்கமற்ற விஷயங்களுக்கான தனது சொத்து மதிப்பில் 20 பில்லியன் டாலரை நன்கொடையாக கொடுப்பதாக அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் அறிவிப்புக்கு பிறகு, அதானி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த நன்கொடை அறிவிப்புக்கு பிறகு பில்கேட்ஸ் 5வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். போர்ப்ஸ் ரியல் டைம் அறிக்கையின் படி, இவரின் சொத்து மதிப்பீடு 102 பில்லியன் டாலராகும்.
கெளதம் அதானி
இதே கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு மொத்தம் 114 பில்லியன் டாலராகும்.
கடந்த வாரம் பில்கேட்ஸ் தனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு இம்மாதம் 20 பில்லியன் டாலர் நன்கொடை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், ஒவ்வொரு நபருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையினை இந்த அறக்கட்டளை வழங்கும் என அறிவித்திருந்தார்.
முகேஷ் அம்பானியின் நிலை என்ன?
ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி, எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்திலும், பெர்னால்ட் அர்னால்டு இரண்டாவது இடத்திலும், அமேசானின் ஜெப் பெசோஸ் 3வது இடத்திலும் இடம் பெற்றுள்ளார். இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 10வது இடத்திலும் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 88 பில்லியன் டாலராகும்.
கெளதம் அதானியின் பிரம்மாண்ட வளர்ச்சி
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதமே நாட்டின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியை, கெளதம் அதானி ஓவர் டேக் செய்தார். உலகின் மிகப்பெரிய அளவில் செல்வத்தினை ஈட்டியவராகவும் வளர்ந்துள்ளார். 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இவரின் செல்வம் இருமடங்காக அதிகரித்துள்ளது. தற்போதைய மதிப்பு 112.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அதானியின் கவனம்
உள்கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான அதானி, தற்போது பசுமை எனர்ஜி, எரிவாயு, மின்சாரம், துறைமுகம் என பலவற்றிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி உற்பத்தியாளராக வேண்டும் என கடந்த ஆண்டே அதானி மிகப்பெரிய முதலீட்டு திட்டத்தினை அறிவித்தது.