ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் எஸ்பி எனர்ஜி என்னும் நிறுவனத்தைப் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தித் துறையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் நிறுவனம் மொத்தமாகக் கைப்பற்றுகிறது.
இந்த நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அதானி கிரீன் மிகப்பெரிய வர்த்தக இலக்கை அடைவது மட்டும் அல்லாமல் இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இந்த நிறுவனத்தில் என்ன இருக்கு..? எஸ்பி எனர்ஜி வைத்துக் கௌதம் அதானி எதைச் சாதிக்கப்போகிறார்..?
எஸ்பி எனர்ஜி இந்தியா
எஸ்பி எனர்ஜி இந்தியா நிறுவனம் ஜப்பான் சாப்ட்பேங்க் மற்றும் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது, இரு நிறுவனங்களும் 80:20 சதவீத பங்குகளை வைத்து இந்திய வர்த்தகத்தை இயக்கி வருகிறது.
கௌதம் அதானியின் அதானி கிரீன்
இந்த நிறுவனத்தைக் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சுமார் 3.5 பில்லியன் டாலர் அதாவது 26,000 கோடி ரூபாய்க்கு மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும்போதே அதானி கிரீன் 5 சதவீத உயர்வைப் பதிவு செய்தது.
எஸ்பி எனர்ஜி மின்சார உற்பத்தி
எஸ்பி எனர்ஜி இந்தியாவில் சுமார் 4 மாநிலங்களில் சுமார் 4,954 மெகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்றல் மூலம் கௌதம் அதானி 2025ஆம் ஆண்டுக்குள்ள 25 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத் தயாரிக்கும் ஒரு நிறுவனமான உருவெடுக்கும்.
சோலார், காற்றாலை மின்சாரம்
எஸ்பி எனர்ஜி உற்பத்தி செய்யும் 4,954 மெகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 84 சதவீதம் சோலார் மின்சாரம், 9 சதவீதம் காற்று - சோலார் இணைந்த ஹைப்பிட் மின்சாரம், 7 சதவீதம் காற்றாலை மூலம் மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது.
முயற்சியில் தோல்வி
எஸ்பி எனர்ஜி தனது நிறுவனத்தை ஏப்ரல் மாதமே விற்பனை செய்யத் திட்டமிட்டது, கனடா பெஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு நிறுவனத்துடன் இந்நிறுவனத்தை விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட காரணத்தால் கனடா நிறுவனம் பேச்சுவார்த்தையில் இருந்து மொத்தமாக ஏப்ரல் 17ஆம் தேதி வெளியேறியது.
அதானி கிரீன் வென்றது
இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக எஸ்பி எனர்ஜி நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த கௌதம் அதானியின் அதானி கிரீன் வென்றுள்ளது. அதானி கிரீன் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 370 சதவீதம் வளர்ச்சி அடைந்து 23 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.