இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் அதானி போர்ட்ஸ் தற்போது தனது வர்த்தக்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளைக் கைப்பற்றி வருகிறது.
இதன் படி தற்போது கௌதம் அதானி தலைமையிலான அதானி போர்ட்ஸ் கங்காவரம் துறைமுக நிறுவனத்தில், லேக்சைடு இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் வைத்திருந்த 31.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்றுமதிக்குத் தயாராகும் இந்தியா
இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கப் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தச் சில வருடங்களில் அதிகளவிலான இந்திய தயாரிப்புப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வர்த்தகத்தை இந்தியா பெற உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் துறைமுகங்களை மேம்படுத்த பல விதமான திட்டங்களைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதானி போர்ட்ஸ்
இதன் அடிப்படையில் தனியார் நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் தனது துறைமுக வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் புதிய துறைமுகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது.
1,954 கோடி ரூபாய்
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் கங்காவரம் துறைமுகத்தில், தனியார் முதலீட்டு நிறுவனம் வைத்திருந்த 31.5 சதவீத பங்குகளைச் சுமார் 1,954 கோடி ரூபாய் அளவிலான தொகைக்குக் கௌதம் அதானி தலைமையிலான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கங்காவரம் துறைமுகம்
கங்காவரம் துறைமுகத்தில் தற்போது 9 பெர்த் கொண்டு வருடம் 64 MMT அளவிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டு உள்ளது. அதானி கைப்பற்றிய பின்பு சுமார் 1,800 ஏக்கர் நிலம் சொந்தமாகக் கொண்டு உள்ள இந்தக் கங்காவரம் துறைமுகத்தை 31 பெர்த் வரையில் மேம்படுத்தி வருடத்திற்கு 250MMT அளவிலான சரக்குகளைக் கையாழும் திறன் கொண்ட துறைமுகமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
முக்கிய வர்த்தகப் பொருட்கள்
கங்காவரம் துறைமுகம் ட்ரை மற்றும் பல்க் பொருட்களைக் கையாளும் திறன் கொண்டு உள்ளதால் இந்தத் துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, இரும்பு தாது, விவசாய உரம், பாக்சைட், சர்க்கரை, அலுமினியம், ஸ்டீல் ஆகிய பொருட்களைக் கையாள முடியும்.
8 மாநிலங்கள்
மேலும் கங்காவரம் துறைமுகத்தின் மூலம் கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்திய இந்திய பகுதிகளில் சுமார் 8 மாநிலங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தேவைகளை முழுமையாகப் பூர்த்திச் செய்யும் அளவிற்குத் திறன் கொண்டு உள்ளது. இந்தத் துறைமுகத்தில் தற்போது 31.5% பங்குகளை அதானி போர்ட்ஸ் கைப்பற்றியுள்ள நிலையில், மீதமுள்ள 58.1 சதவீத பங்குகளை DVS ராஜூ குடும்பமும், 10.4 சதவீத பங்குகளை ஆந்திர அரசு வைத்துள்ளது.
லாபம் மற்றும் நிதி கையிருப்பு
கங்காவரம் துறைமுக 2020ஆம் நிதியாண்டில் சுமார் 1,082 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தையும், 516 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் கங்காவரம் துறைமுகக் கடன் எதுவும் இல்லாமல் கையிருப்பில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.