பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய GCC எனப்படும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் அதாவது பன்னாட்டு திறன் மையங்களை இந்தியாவில் அமைப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு ஜிசிசி மையங்களை ஈர்க்கக்கூடிய ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் ஐடி துறையையே மிஞ்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக ஜிசிசி உருவாகி இருக்கிறது. 2029 -2030-ம் ஆண்டுக்குள் இந்த ஜிசிசி மையங்கள் மூலம் இந்தியாவில் 28 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரையிலான வேலை வாய்ப்புகள் உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக டீம் லீஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது .

"இந்தியாவின் ஜிசிசி மையங்கள்" என்ற பெயரில் டீம் லீஸ் நிறுவனம் ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறது . அதில் இந்தியாவில் தற்போது 1800 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன , உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொத்த ஜிசிசி மையங்களில் 55 சதவீத மையங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன என தெரிவித்திருக்கிறது .
இந்த மையங்களில் மொத்தம் 19 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள் , இதன் மூலம் 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் 64.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி வருவாய் கிடைத்திருக்கிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்திருக்கும் டீம் லீஸ் நிறுவனம் இதன் மூலம் இந்தியாவில் 28 லட்சத்திலிருந்து 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக போகின்றன என தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஜிசிசி மையங்கள் அமைப்பது அத்தனை எளிதல்ல. ஜிசிசி மையங்கள் 18 ஒழுங்குமுறை அமைப்புகளிடம் ஆயிரக்கணக்கான அனுமதிகளை பெற வேண்டி இருக்கிறது என கூறுகிறார் டீம் லீஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி நீதி சர்மா. ஜிசிசி மையங்களில் உருவாகும் ஐந்தில் ஒரு வேலைவாய்ப்பு என்பது ஏஐ ,கிளவுட், டேட்டா இன்ஜினியரிங் ,சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் ஃபிரஷர்களுக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை உண்டாக்கி தரக்கூடிய ஒரு பிரிவாக ஜிசிசி மையங்கள் மாறி வருகின்றன என கூறும் நீதி சர்மா , இந்த நிறுவனங்களில் 12ல் இருந்து 22 சதவீதம் வேலைவாய்ப்புகள் ஃபிரஷர்களுக்கு கிடைக்கும் என்றும் ஏஐ ,கிளவுட், டேட்டா இன்ஜினியரிங் பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு ஜிசிசி மையங்களில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். அதேபோல மிட் லெவல் நிபுணர்களுக்கு 86 சதவீத வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறுகிறார்.
ஒருபுறம் டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கையில் எடுக்கும் நிலையில் புதிதாக படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஜிசிசி மையங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications