நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.
இதன் காரணமாக முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது.
இது கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஏப்ரல் பிற்பாதியில் இருந்து படிப் படியான தளர்வுகள் என்பது அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் தற்போது வரையிலும் கூட சில கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.
உண்மையில் இந்த காலகட்டத்தில் விவசாயத் துறை தவிர, மற்ற துறைகள் மோசமான வீழ்ச்சியினை பதிவிட்டு வருகின்றனர்.
முதல் காலாண்டிலேயே மோசமான வளர்ச்சியினை கண்ட நிலையில், இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவினைக் கண்டிருந்தது.
கடந்த இரண்டு காலாண்டினை பொறுத்தவரையில், தொழில்துறைகள், வணிக சேவைகள், சேவைத் துறை என பலவும் முடங்கின. இதனால் ஜிடிபி விகிதம் மைனஸில் சென்றது. எனினும் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் வழக்கம்போல செயல்பட ஆரம்பித்துள்ளன. அலுவலகங்கள் தற்போது பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
இதனால் மக்களின் செலவினங்களும் அதிகரித்துள்ளது. இதனால் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆக முந்தைய இரண்டு காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது டிசம்பர் காலாண்டில் ஒரளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் நிபுணர்கள் ஜிடிபி விகிதம் வளர்ச்சி பாதையிலும் இல்லாமல், சரிவிலும் இல்லாமல் பிளாட்டாக இருக்கலாம். அதாவது 0% ஆக இருக்கலாம் என்று கணித்துள்ளனர். இதே ராய்ட்டர்ஸ் கணிப்பில் 0.5% வளர்ச்சி இருக்கலாம் என்றும் வெளியிட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் காலாண்டுகளில் இந்த விகிதமானது சற்று முன்னேற்றம் காணலாம். இதனால் அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியான வளர்ச்சியினை காணலாம். கிராமப்புறங்களில் தேவை சற்று மீண்டு வருவதை காணலாம். விவசாயமும் சற்று மேம்பட்டுள்ள நிலையில், விலைவாசியும் சற்று உயர்ந்துள்ளது. இதனால் அவர்களின் வருமானம் உயரும். இதனால் வேலை வாய்ப்புகளும் பெரும். இது வளர்ச்சியினை மேம்படுத்த உதவும்.