தற்போது மிக பரபரப்பான செய்திகளில் ஒன்று இந்தியாவின் ஜிடிபி விகிதம் 23.9% சரிவு என்பது தான். அதுவும் 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சி என்பது தான்.
இவ்வளவு வீழ்ச்சியா? என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது. ஆனால் இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்தது தானே. இதில் ஆச்சரியபடவே, கவலை கொள்ளவோ ஒன்றுமில்லை என்கிறது கேர் ரேட்டிங்ஸ்.
உண்மையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜிடிபி விகிதமானது 15 - 30% ஆக வீழ்ச்சி காணும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்பார்த்ததை விட மோசமாக 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது மார்ச் 2020 இறுதியில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் செய்யப்பட்டது. ஏப்ரல் பிற்பாதியில் இருந்து தான் படிப் படியான தளர்வுகள் என்பது அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த நெருக்கடியான காலத்தில் வளர்ச்சியினைக் காண்பித்த ஒரே துறை விவசாயம் தான். அதே நேரத்தில் அரசின் பொதுத்துறையின் வளர்ச்சி விகிதமானது 10.3% வீழ்ச்சி கண்டுள்ளது அரசுக்கு பெருத்த அடியாகவும் வந்துள்ளது.
மேலும் ஜூன் காலாண்டில் அரசுக்கு செலவினங்களும் மிக அதிகம். குறிப்பாக ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குதல், ஆத்மா நிர்பார் திட்டம், என பல திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது. இதனால் அதிக நிதிப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எப்படி எனினும் இந்த நிதி பற்றாக்குறையானது துரதிஷ்டவசமாக ஜிடிபியால் ஏற்படவில்லை என்பது நல்ல விஷயம். இது அரசாங்கம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
விவசாயம் தவிர மற்ற துறைகள் எதிர்மறையான வளர்ச்சியினையே பதிவு செய்துள்ளது. எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 37.9% சரிந்திருந்த முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி விகிதமானது, ஜூலை மாதத்தில் 9.6% ஆக குறைந்துள்ளது.
குறிப்பாக சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்துறை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. ஏனெனில் நாடு தழுவிய லாக்டவுன் மற்றும் விநியோக சங்கிலி பாதிப்பு காரணமாக, உற்பத்தியில் குறைவு, குறைந்த நுகர்வு, மின்சார தேவை குறைப்பு என பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நிலக்கரிக்கான தேவையும் குறைந்தது. இதுவே சுரங்கத்துறையானது திட்டங்களை நிறுத்துவது மற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. முதல் காலாண்டில் இதுபோன்ற பல காரணிகளால் பாதிக்கப்பட்டது எனில், இரண்டாவது காலாண்டில் பருவமழை காரணி காரணமாக மேலும் தடைபடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
எனினும் எதிர்வரும் காலாண்டுகளில் இந்த விகிதமானது சற்று முன்னேற்றம் காணலாம். இதனால் அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியான வளர்ச்சியினை காணலாம். மூன்றாவது காலாண்டில் பண்டிகை காலம் தொடங்குவதால், கிராமப்புறங்களில் தேவை சற்று மீண்டு வருவதை காணலாம். விவசாயமும் சற்று மேம்பட்டுள்ள நிலையில், விலைவாசியும் சற்று உயர்ந்துள்ளது. இதனால் அவர்களின் வருமானம் உயரும். இதனால் வேலை வாய்ப்புகளும் பெரும். இது வளர்ச்சியினை மேம்படுத்த உதவும். எனினும் இன்னும் கூடுதல் வளர்ச்சியினைக் காண கூடுதல் தூண்டுதல் தொகுப்பு மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் இங்கு அனைவரின் எதிர்பார்ப்பும் அது தானே.