இன்றைய நாள் மிக மோசமான நாளாக இருந்திருக்கும். ஏனெனில் இன்று காலையில் இருந்தே வரிசையாக மோசமான செய்திகளைத் தான் அதிகம் படித்திருப்போம். அதிலும் கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, மிக மோசமான அளவு வளர்ச்சியினைக் கண்டுள்ளது இந்தியா.
இது எதிர்பார்த்த ஒரு விஷயமாகவே இருந்தாலும், நிபுணர்கள் இதனை ஒரு மோசமான காலாண்டு என்கிறார்கள்.
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருவதனையே இந்த ஜூன் காலாண்டு ஜிடிபி விகிதம் சுட்டிக் காட்டுகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 68 நாட்கள் லாக்டவுன் செய்யப்பட்டிருந்தது. இது கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த என்றாலும், இந்திய பொருளாதாரத்தினையே புரட்டி போட்டுள்ளது எனலாம்.
ஆலோசனை நிறுவனமான EY இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி விகிதமானது, நான்கு காலாண்டுகளிலும் மிக மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. ஆக இது நடப்பு நிதியாண்டின் அடுத்தடுத்த காலாண்டுகளில் பொருளாதாரம் சிறப்பாக செயல்படக் கூடும் என்பதை குறிக்கிறது.
இதே ஆகஸ்ட் 17 அன்று எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, முதல் காலாண்டு வளர்ச்சியானது -16.5% ஆக இருக்கும் என்று கூறியிருந்தது. எனினும் தொற்று நோயினால் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலினால் இது மாறக்கூடும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே ராய்ட்டர்ஸ் அறிக்கையில், ஜூன் காலாண்டில் ஜிடிபி விகிதம் 18.3% சரியலாம் என்று கணித்திருந்தது. இதுவே செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டுகளில் முறையே 8.1% மற்றும் 1% சரியலாம் என்றும் கணித்திருந்தது.
இதே ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஜூன் காலாண்டில் ஜிடிபி விகிதமானது 18% சரியலாம் என்றும் கணித்திருந்தது. பார்க்லேஸ் நிறுவனத்தின் தலைமை இந்திய பொருளாதார வல்லுனர் ராகுல் பஜோரிய, ஜூன் காலாண்டில் 25.5% சரிவு இருக்கலாம் என்றும் கணித்திருந்தார்.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஜிடிபி விகிதம் 17.5% சரிவினைக் காணலாம் என்று அறிவிக்கக்கூடும், இதுவே முறை சாரா கணக்கொடுப்பு கிடைக்கும் போது 25% சரிவாக மாற்றப்படலாம் என்றும் ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்ஸின் தலைமை இந்தியா பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறியிருந்ததும் கவனிக்கதக்கது. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு சரிவினைக் காணலாம் என்று கூறியது போலவே, ஜிடிபியும் முதல் காலாண்டில் 23.9% ஆக சரிந்துள்ளது.