டெல்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை(recession) என்று கடந்த புதன் கிழமையன்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி விகிதம் வெள்ளிக் கிழமையன்று வெளியிடலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிக்கையில் பேசிய பொருளாதார வல்லுனர்கள் குழு, பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதை ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.2 - 4.7 சதவிகிதத்திற்குள் இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளனர். இது கடந்த ஜூன் காலாண்டிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு 5 சதவிகிதமாக சரிந்தது. இதனையடுத்து செப்டம்பர் காலாண்டில் இன்னும் இந்த விகிதம் வீழ்ச்சியடையும் என்று கூறியிருப்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
கடந்த 2012 - 2013ம் நிதியாண்டில் மார்ச் காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.3 சதவிகிதமாக இருந்தது. இது உலகப் பொருளாதாரத்தின் அழுத்தங்களுக்கும் மத்தியிலும், இதே நேரத்தில் இந்தியா அதிக பணவீக்கத்தையும், அரசியல் கொந்தளிப்பையும் எதிர்த்து போராடியது.
இறக்குமதி, ஏற்றுமதி, ரயில் சரக்கு வருவாய், மின்சாரம் மற்றும் டீசல் நுகர்வு, ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி என ஆறு முக்கிய துறைகளின் வளர்ச்சியும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட, செப்டம்பர் மாதத்தில் சுருங்கிவிட்டன என்பதை தரவுகள் காட்டுகின்றன. மேலும் இந்த குறிகாட்டிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை குறிகாட்டிகளின் தொகுப்பாகும். இது பொருளாதாரத்தின் கணிசமான பகுதிகளைக் உள்ளடக்கியது.
ஆக இவையெல்லாம் நேர்மறையான வளர்ச்சியில் இருந்த போதே ஜிடிபி 5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இவை அனைத்தும் தற்போது சிவப்பு நிறத்தில் உள்ள நிலையில் ஜிடிபி மட்டும் எப்படி அதிகரிக்கும். குறிப்பாக துறைமுக போக்குவரத்து தேக்கமடைந்து, கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 0.4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியிலும் கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது.
இது தவிர மின்சார உபயோகமும் குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தியும் குறைந்துள்ளது. இது தவிர டீசல் நுகர்வும் -3.3 விகிதம் குறைந்துள்ளது. இதே ஏற்றுமதி -6.6 சதவிகிதம் குறைந்தும், இறக்குமதியும் கூட -13.8 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகிறது.
மேலும் மிக வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களான ஷாம்பு சாச்செட்டுகள், தேங்காய எண்ணெய் போன்றவற்றின் வளர்ச்சி 2 சதவிகிதம் பலவீனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து யெஸ் பேங்கின் தலைமை பொருளாதார நிபுணர் சுபாதா ராவ், பிசினஸ் ஸ்டாண்டர்டிடம் அளித்துள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கப்படும் சேவைகள் தவிர அனைத்து துறைகளும், கடந்த செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி குறைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். எப்படியோங்க இந்த கேள்விகளுக்கெல்லாம் நாளை வரவிருக்கும் ஜிடிபி விகிதம் தான் பதில் சொல்லனும்.