அமெரிக்கா: Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுழையாத துறைகளே இல்லை என்ற அளவுக்கு தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுகளே பரவலாக இருக்கின்றன.
இதற்கு காரணம் மனிதர்கள் செய்யும் வேலைகளை செயற்கை நுண்ணறிவு அதே திறமையுடன் செய்வது தான். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு செயற்கை நுண்ணறிவு GEN Z ஊழியர்களின் வேலைகளை பறிக்கப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Intelligent.com என்ற வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வறிக்கை நடத்தியது. அதில் பல்வேறு நிறுவனங்களும் புதிதாக பணிக்கு அமர்த்திய GEN Z பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் அந்த பணிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களை சேர்ந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடிய 800 மேலாளர்களிடம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தி இருக்கிறது.அதில் செயற்கை நுண்ணறிவால் ஒரு வேலையை செய்ய முடியும் என்ற சூழல் வருகின்ற பட்சத்தில் அந்த இடத்திற்கு மனிதர்கள் தேவையில்லை .எனவே மனிதர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என 78% மேலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக இந்த பணி நீக்கங்களில் பாதிக்கப்பட போவது அண்மையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பணிக்கு சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும் என கிட்டத்தட்ட 700 மேலாளர்கள் தெரிவித்துள்ளார்களாம். ஹூ நியூகன் என்ற வேலைவாய்ப்பு ஆலோசகர் தற்போது லே-ஆஃப் புயலில் GEN Z ஊழியர்களே சிக்கி இருக்கின்றனர் அவர்களுக்கு தான் ஆபத்து அதிகம் எனக் கூறியுள்ளார்.
புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள பட்டதாரிகள் நுழைவு நிலையில் உள்ள வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்றனர். அதாவது ஆய்வு செய்வது, டேட்டா என்ட்ரி, வாடிக்கையாளர் சேவை, பொதுவான அலுவலக உதவிகள் இவற்றுக்காகவே பணியமர்த்தப்படுகின்றனர்.
எனவே செயற்கை நுண்ணறிவு இவர்களது வேலைக்கு தான் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். இந்த ஆய்வின் போது சுமார் 11 நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் புதிதாக பட்டதாரி ஆகி வேலைக்கு சேர்ந்தவர்களில் 15 முதல் 30 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்க இருப்பதாகவும் அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு மூலம் அந்த வேலைகளை செய்து முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications