ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜிய சபாவில் பொதுக் காப்பிட்டு வர்த்தக மசோதாவை அமலாக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த மசோதாவை ஆகஸ்ட் 3ஆம் தேதி மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா எதற்காக..?
பொதுக் காப்பிட்டு வர்த்தக மசோதா (General Insurance Amendment Bill) மூலம் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனியார் பங்கீடு பெரிய அளவில் அதிகரிக்க முடியும். இதுமட்டும் அல்லாமல் இந்த மசோதா மூலம் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அரசு 51 சதவீத பங்குகளுக்குக் குறையாமல் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கியுள்ளது.
இதன் மூலம் தற்போது அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் காப்பீட்டு நிறுவனங்களை எளிதாகத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு முதலீட்டைத் திரட்ட முடியும்.
இந்த மசோதா அவசியமா..?
இந்த மசோதா தேவை என மத்திய அரசு கூறும் 4 முக்கியக் காரணங்கள் இது தான்.
1. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனியார் பங்கீடு அதிகரிக்க வேண்டும்.
2. காப்பீட்டு விரிவாக்கம் மற்றும் சமுகப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்
3. பாலிசிதாரர்-ன் விருப்பத்தைக் காக்க வேண்டும்
4. இந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்
யாருக்கு பாதிப்பு..?
பொதுவாக இந்திய மக்கள் அதிகளவில் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு மிக முக்கியக் காரணம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை எவ்விதமான மாற்றும் இல்லாமல் கிடைக்கும் என்பது தான்.
ஆனால் இந்தப் புதிய மசோதா மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, ஓரியென்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவை தனியார்மயமாக்கப்படும்.
பட்ஜெட் அறிவிப்பு
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிவிப்பில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தையும், இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அரசு பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
தடைகள் நீக்கம்
இதற்கு வழிவகுக்கும் நிலையில் இந்த மசோதா அமைந்துள்ளது. மேலும் இந்த மசோதா பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார்மயமாக்கல்-க்குத் தடையாக இருக்கும் அனைத்துச் சட்டங்களை நீக்கியுள்ளது.
எல்ஐசி ஐபிஓ திட்டம்
இதைத்தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான LIC நிறுவனத்தை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் கட்டாயம் ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருண் ஜெட்லி
முன்னாள் நிதியமைச்சரான அருண் ஜெட்லி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, ஓரியென்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 3 நிறுவனத்தையும் ஒன்றாக இணைத்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க 2018 பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்தார்.
ஜூலை 2020ல் மோடி அரசு இந்த இணைப்புத் திட்டத்தைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.