பொதுத்துறை வங்கி ஊழியர்களை தொடர்ந்து, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும், எல் ஐ சி ஊழியர்களும் இரு நாட்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்த அறிவிப்பில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் எல் ஐ சி ஊழியர்களும் இணைந்து மார்ச் 17 மற்றும் மார்ச் 18 அன்று போராட்டம் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வேலை நிறுத்தமானது எல்ஐசி பங்கு விற்பனை எதிர்த்து செய்யப்படவுள்ளது.
இரு நாட்கள் வேலை நிறுத்தம்
அரசு நிதி திரட்டும் பொருட்டு எல் ஐ சி நிறுவனத்தின் பங்குகளை பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் விற்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு பட்ஜெட் 2021 - 22ல் இலக்கினையும் நிர்ணயித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மார்ச் 17 அன்று பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும், மார்ச் 18 அன்று எல் ஐ சி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே போராட்டம்
நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், எல்.ஐ.சி. தனியார்மயமாக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அதன் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே சில முறை போராட்டத்தில் குதித்தன.
எல் ஐ சி போன்ற வளர்ச்சி அடைந்த நிறுவனத்தை பங்கு முதலீட்டில் ஏன் கொண்டு வர வேண்டும்? சுமார் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் எல்ஐசி-யில் தனியாரின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
அரசு பரிசீலனை செய்ய வேண்டும்
எல்.ஐ.சி. பொது மக்களின் சொத்தாகும். இது மக்கள் இயக்கமாக மாற எதிர்க்க வேண்டும். பாலிசிதாரர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல கருத்துகளை வலியுறுத்தி இந்த போராட்டங்களை ஊழியர்கள் செய்யவுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம்
ஏற்கனவே மார்ச் 15 மற்றும் மார்ச் 16 அன்று பொதுத்துறை வங்கிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கூறியதுபோல பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம் என வங்கி ஊழியர் சங்கங்கள் அஞ்சுகின்றன. இதனால் மத்திய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வங்கிகள் ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே வங்கி ஊழியர் சங்கங்கள் வங்கி போராட்டத்தினை கையிலெடுத்தன.
அரசுக்கு வேண்டுகோள்
எல்.ஐ.சி நிறுவன பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, எல்.ஐ.சியை தனியார்மயமாக்குவது, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49%ல் இருந்து 74% உயர்த்துவது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் வளர்ச்சி திட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு பெரிதும் பாதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தினை அறிவித்துள்ள நிலையில், அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இங்கு அனைவரின் கோரிக்கையாகும்.