இந்தியாவின் பயணிகள் வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் ஜெர்மன் நாட்டின் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் வெப்சாட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஒரு தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலை முழுக்கச் சன்ரூஃப் தயாரிப்பதற்காக webasto பயன்படுத்த உள்ளது.
இப்புதிய தொழிற்சாலைக்காக வெப்சாட்டோ நிறுவனம் 250 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களுக்கும் சன்ரூஃப் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது webasto நிறுவனம்.
இந்தியாவில் கிட்டதட்ட 10 வருடங்களாக இயங்கி வரும் webasto நிறுவனம், இப்புதிய தொழிற்சாலை மூலம் தனது உற்பத்தியை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் புதிதாக ஒரு டெஸ்டிங் சென்டரை-யும் அமைக்க உள்ளோம் என webasto இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விகாஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சன்ரூஃப் பொருத்தப்பட்ட கார்களின் விற்பனையும், தயாரிப்பும் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான தேவை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்புதிய தொழிற்சாலை மூலம் இந்திய சந்தைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என நம்பகிறது webasto இந்தியா நிறுவனம்.
இதுமட்டும் அல்லாமல் webasto இந்தியா கடந்த 10 வருடமாகப் புனே நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்து வரும் நிலையில், இப்புதிய தொழிற்சாலையும் புனேவில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.