ஜெர்மனி நாட்டில் நடக்க உள்ள ஜி7 மாநாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விருந்தினராக அழைக்கலாமா வேண்டாமா என ஜெர்மனி ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஜி7 மாநாடுகளில் தொடர்ந்து இந்திய பிரதமர் விருந்தினராக அழைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முறை தீவிரமாக ஆலோசனை செய்ய என்ன காரணம்..?!
ஜி7 மாநாடு
விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடை விதித்து, கண்டனமும் தெரிவித்தது. ஆனால் இந்தியா ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 48வது ஜி7 மாநாட்டை நடத்தும் ஜெர்மனி இந்திய பிரதமரை இந்த ஆண்டு விருந்தினராக அழைக்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி
ஜெர்மனி நாட்டில் பவேரியா-வில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் செனகல், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவை விருந்தினர்களாக ஜெர்மனி சேர்க்க ஏற்கனவே முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தியா-வை அழைப்பதா வேண்டாமா என்பது பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா
உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு வரையப்பட்ட பட்டியலில் இந்தியா இருந்ததாகவும், தற்போது ரஷ்யாவின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து இப்பட்டியலை மறுஆய்வு செய்யத் துவங்கியுள்ளது ஜெர்மனி, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
மனித உரிமை கவுன்சில்
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை சஸ்பென்ட் செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் இருந்து விலகிய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
48வது ஜி7 மாநாடு
48வது ஜி7 மாநாடு 2022 ஜூன் 26 முதல் 28 வரை ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸில் உள்ள Schloss Elmau இல் நடைபெற உள்ளது. ஜெர்மனி இதற்கு முன்பு 2015 இல் இதே பகுதியில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2022 ஜி7 மாநாடு ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரின் முதல் மாநாடு ஆகும்.
7 நாடுகள்
குரூப் ஆஃப் செவன் என்பதன் சுருக்கம் தான் ஜி7, இந்தக் கூட்டம் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடக்கிய ஒரு அரசியல் மன்றமாகும். இந்தக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாகும்.