சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ரஷ்ய ஆயுத வியாபாரியின் கப்பலை ஒரு உக்ரைன் ஊழியர் நாசமாக்கியது மட்டும் இல்லாமல் கடலில் மூழ்கடித்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் மிகவும் வைரலான நிலையில், இன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
ஜெர்மனி அரசு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்ட சில ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் ஈடுப்பட்ட போது முன்கூட்டியே திட்டமிட்டு ரஷ்ய கோடீஸ்வரர் அலிஷர் உஸ்மானோவ்-இன் ஆடம்பர கப்பலை கைப்பற்றியுள்ளது. இந்தக் கப்பல் விலையைக் கேட்டா ஆடிப்போயிருவீங்க.
அலிஷர் உஸ்மானோவ்
ரஷ்ய கோடீஸ்வரர் அலிஷர் உஸ்மானோவ் என்பவருக்குச் சொந்தமான 500 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட ஆடம்பர கப்பலை ஹாம்பர்க்-ன் வடக்குத் துறைமுகத்தில் இருந்து ஜெர்மன் அரசு அதிகாரிகள் Dilbar என்ற ஆடம்பர கப்பலை கைப்பற்றியுள்ளனர்.
Dilbar சூப்பர்யாட்ச்
Dilbar என்னும் இந்தச் சூப்பர்யாட்ச் உலகிலேயே அதிக எடை கொண்ட ஆடம்பர கப்பலாக மட்டும் இல்லாமல் மிகவும் நீளமாக நீச்சல் குளம் மற்றும் பல்வேறு கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இந்தக் கப்பலில் உள்ளது. இந்தக் கப்பலின் மதிப்பு 600 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் படி 4500 கோடி ரூபாய்.
4500 கோடி ரூபாய்
Dilbar கப்பல் உரிமையாளர்களுக்கும் ஜெர்மனி நாட்டின் கப்பல் கட்டுமான நிறுவனமான Blohm + Voss-க்கு நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்த நிலையில் நேரம் பார்த்து இந்த 4500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர கப்பலை கைப்பற்றியுள்ளது ஜெர்மனி அரசு.
ரோஸ்நேபிட் - இகோர் செச்சின்
இதேபோல் இன்று ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேபிட்-ன் தலைவர் இகோர் செச்சின்-க்கு சொந்தமான Amore Vero என்னும் ஆடம்பர கப்பல் பிரான்ஸ் அரசு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
5 ஆடம்பர கப்பல்
மேலும் ரஷ்ய பணக்காரர்களுக்குச் சொந்தமான 5 ஆடம்பர கப்பல்கள் தற்போது அமெரிக்கா மற்றும் இதர நாடுகளால் தொட முடியாத மாலத்தீவு மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ளது. இந்தக் கப்பலின் இருப்பிடத்தைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
25 ரஷ்ய பணக்காரர்கள்
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் தடைகள் விதித்தது மட்டும் அல்லாமல் 25க்கும் அதிகமான பணக்காரர்கள், நிறுவனத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சொத்து கைப்பற்றல்
இந்தத் தடை உத்தரவின் வாயிலாக இந்த 25 நபர்களுக்குச் சொந்தமாக வெளிநாட்டில் இருக்கும் வங்கி கணக்கு, முதலீடுகள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள், கார், கப்பல் என அனைத்தும் உலக நாடுகள் கைப்பற்றி வருகிறது. இதன் வாயிலாகவே இரு கப்பல்களைத் தற்போது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அரசு அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர்.