இந்தியாவில் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் மத்திய அரசு உருவாக்கியுள்ள திட்டத்தின் மூலம் ஒருவர் தினமும் 2 ரூபாய் முதலீடு செய்தால் போதும் வருடம் 36000 ரூபாய் அளவிலான ஒய்வூதியம் பலன் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் பெயர் என்ன..? இந்தத் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்..? இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது..?
இந்தியா
இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் வகைப்படுத்தாத துறையைச் சார்ந்து மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இப்பிரிவில் இருக்கும் மக்களுக்கு வகைப்படுத்தப்பட்ட துறையில் இருக்கும் மக்களுக்குக் கிடைக்கும் முக்கியமான சலுகைகள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மோடி அரசு முடிவு செய்தது.
வகைப்படுத்தாத துறை
இதற்காக மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உள்ள வகைப்படுத்தாத துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு நிதியியல் உதவி, எதிர்காலப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா(PM-SYM) என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம்
இந்தத் திட்டம் மூலம் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் ஒரு தொழிலாளர் தினமும் 2 ரூபாய் முதலீடு செய்தால் போதும் வருடம் 36000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அதாவது 60 வயதை எட்டிய பின்பு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும்.
ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு
இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும், இல்லையெனில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா (PM-SYM) திட்டத்தில் ஒவ்வொருமாதமும் 55 ரூபாய் முதலீடு செய்தால் மட்டுமே மாதம் 3000 ரூபாய் பென்ஷன் பெற முடியும்.
ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா (PM-SYM) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2019 இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
யாருக்கெல்லாம் இந்தத் திட்டம்..?
வகைப்படுத்தா துறையில் இருக்கும் தொழிலாளர்கள் எனில் வீட்டில் பணிபுரிபவர்கள், தெருவோர வியாபாரிகள், கட்டிட ஊழியர்கள், ரிக்ஷா ஓட்டுனர், மதிய உணவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், குப்பை பொருட்களை எடுப்பவர்கள், வீட்டுப் பணியாளர்கள், துவைப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், ஆடியோ வீடியோ தொழிலாளர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
15,000 ரூபாய் வருமானம்
இத்திட்டத்தில் மேலே கூறப்பட்ட தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் மாத வருமானம் 15,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மேலும் இத்திட்டத்தை முதலீடு செய்ய வேண்டுமாயின் ஒருவர் 18-40 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
முக்கியக் கட்டுப்பாடு
மேலும் இத்திட்டத்தைப் பெறுபவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடாது.
வருமான வரி
மேலும் வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. வருமானம் குறைவாகவும், முதுமையில் கேள்விக்குறியாக இருக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் என்பதால், இதைச் சரியா கொண்டு சேர்க்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பூர்த்திச் செய்தால் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு சந்தாதாரரும், 60 வயதை எட்டிய பிறகு, குறைந்தபட்சம் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் ஒருவர் வருடத்திற்கு 36,000 ரூபாயை ஓய்வூதியமாகப் பெற முடியும், ஆனால் அதற்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
சேர்வது எப்படி
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் மொபைல் போன், சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தகுதியானவர்கள் அருகிலுள்ள CSC சென்டருக்கு சென்று ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு/ ஜன்-தன் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி இத்திட்டத்தில் பதிவு செய்யலாம்.