இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்த நிலையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்குக் கீழ் விவசாயம் அல்லாத துறையில் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் படி பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் முக்கியமாகக் கிக் எகானமி, இந்தியாவில் புதிய வர்த்தகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இத்துறைகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. குறிப்பாக டெலிவரி சேவை பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
கிக் எகானமி என்றால் என்ன..?
வேலைவாய்ப்புச் சந்தையில் 3 வகையான வேலைவாய்ப்புகள் உள்ளது, நிரந்தர வேலைவாய்ப்புகள், குறுகிய கால ஒப்பந்த வேலைவாய்ப்புகள், ப்ரீலேன்சிங் வேலைவாய்ப்புகள் ஆகியவை ஆகும். கிக் எகானமி வேலைவாய்ப்புகள் என்பது குறுகிய கால ஒப்பந்த வேலைவாய்ப்பு மற்றும் ப்ரீலேன்சிங் வேலைவாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைய உள்ளது.
இந்தப் பிரிவுகளில் தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பிக் ஆக விளங்குகிறது.
9 கோடி வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் கிக் எகானமி வாயிலாக மட்டும் சுமார் 90 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், இதன் மூலம் சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்யமுடியும். இத்துறையைத் திறம்பட மேம்படுத்தினால் இதன் வாயிலாக மட்டுமே நாட்டின் பொருளாதாரம் 1.2 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனப் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வறிக்கை கூருகிறது.
4 முக்கியத் துறைகள்
தற்போதைய நிலவரத்தின் படி இந்தியாவின் கிக் எகானமி பிரிவில் கட்டுமானம், உற்பத்தி, ரீடைல் மற்றும் டிரான்ஸ்போர்ட் & லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் மட்டும் சுமார் 7 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டு உள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.
குறுகிய கால ஒப்பந்த ஊழியர்கள்
இதேபோல் குறுகிய கால ஒப்பந்த முறையில் திறன் வாய்ந்த, செமி ஸ்கில்டு மற்றும் பங்கீட்டு சேவை துறை மூலம் 2.4 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்க முடியும் எனவும் BCG ஆய்வறிக்கை கூறுகிறது. இப்பிரிவுக்கான தேவைகளும் இந்தியாவில் அதிகமாக உள்ளது.
சட்டப்படியான வரைமுறை
ஆனால் இந்தியாவில் கிக் மற்றும் பிளாட்பார்ம் ஊழியர்களுக்கான சட்டப்படியான வரைமுறை எதுவும் இல்லை, பட்ஜெட் அறிவிப்பில் கூடக் கிக் எகானமி குறித்துச் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாலும் இதுவரை எவ்விதமான அறிவிப்பும் தெளிவான விலக்கத்தை அளிக்கவில்லை.
சமூகப் பாதுகாப்பு
இதேவேளையில் கிக் எகானமி ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் இன்சூரன்ஸ், பிஎப் போன்ற சுமூக பாதுகாப்பு விஷயங்கள் கிடைக்க வழியில்லாமல் உள்ளது. இதை முறையாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
அரசுக்கு வருமானம்
மேலும் இந்த விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளில் இருப்பவர்களை ஒரு கூட்டுக்குள் அல்லது வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் இதன் மூலம் அரசுக்கு ஒருபுறம் வருமானம் என்றாலும் மறுபுறம் இப்பிரிவு ஊழியர்களுக்கு அதிகப்படியான பாதுக்காப்பை அளிக்க இது பெரிய அளவில் உதவும்.