காய்கறி, பழங்கள் துவங்கி மளிகை பொருட்கள் என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடந்த சில மாதங்களாகவே அதிகமாக இருக்கிறது.
இதனால் சாமானிய மக்கள் அதிகளவிலான பணத்தை உணவுப் பொருட்களுக்காகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலை இந்தியாவில் மட்டும் இல்லை ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் இதே நிலை தான். சொல்லப்போனால் 2021ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலை 10 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
உணவுப் பொருட்கள்
2021ஆம் ஆண்டில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விடச் சராசரியாக 28 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
FAO அமைப்பு
ஐநாவின் FAO அமைப்பு உணவு விலைக் குறியீடு வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளில் மாதாந்திர மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது குறியீடு டிசம்பர் மாதம் கணிசமாகக் குறைந்துள்ளது என FAO அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு விலைக் குறியீடு
டிசம்பர் மாதம் உணவு விலைக் குறியீடு 133.7 புள்ளிகளில் இருந்தது. இது பிப்ரவரி 2011இல் 137.6 புள்ளிகளுக்கு நெருங்கி 10 வருடச் சாதனையை எட்டியுள்ளது. உணவு விலைக் குறியீடு ஆண்டு முழுவதும் 125.7 புள்ளிகளாக இருக்கிறது.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்-யின் சராசரி விலை கடந்த ஆண்டு 66 சதவீதம் உயர்ந்து உணவு விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமையல் எண்ணெய் 2021ல் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்கள்
மேலும் தானியங்களின் விலை 27 சதவீதம் உயர்ந்துள்ளது, சோளத்தின் விலை 44.1 சதவீதம் மற்றும் கோதுமை 31.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சி விலை 2021 இல் சராசரியாக 12.7 சதவீதமும், பால் பொருட்கள் 16.9 சதவீதமும் உயர்ந்துள்ளது.