பெங்களூரு: பெங்களூரில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 9.80 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக அரசின் தொழிற்துறை சார்பில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்த நிலையில், இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஒப்பந்தங்களின் மதிப்பு?
இதில் 9.80 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் உப்பள்ளி-தார்வார், மைசூரு, மங்களூரு, கலபுரகி, பல்லாரி, துமகூரு உள்பட பல மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அங்கு நில வங்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவமொக்கா, விஜயாப்புரா விமான நிலையங்கள் விரைவில் செயல்பட தொடங்கும். இது மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க வசதியாக அமையும்.
3 மாதங்களில் அனுமதி
மேற்கோண்டு முதலீடு செய்யவுள்ள நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வசதிகளையும் செய்து வருகின்றது. நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளையும், சப்போர்டினையும் கர்நாடக அரசு செய்து தரும். அடுத்த 3 மாதங்களில் இந்த தொழில் திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்படும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இணைந்து செயல்படுவோம்
மேலும் மாநாட்டில் முதலீடு செய்யவுள்ள நிறுவனங்களுக்கு நிலையான ஆதரவினை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. தற்போது நிறுவனங்களுக்கும் பற்பல சவால்கள் உள்ளன. அரசாங்கத்திற்கும் பற்பல சவால்கள் உள்ளன. ஆக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குறித்து கூறியவர், நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் கர்நாடகத்தின் பங்கு 63% ஆகும்.
ஹைட்ரஜன் & அம்மோனியா உற்பத்தி
இது தவிர ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் அம்மோனியா உற்பத்தியில் வளைகுடா நாடுகளுடன் கர்நாடகா போட்டியிடும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களிடத்தில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் எங்களிடம் உறுதி உள்ளது.பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் அமோனியா உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்படும் என்றும் பொம்மை கூறியுள்ளார்.
மந்த நிலையிலும் சாதனை
தற்போது உலகம் முழுவம் மந்த நிலை அச்சம் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எனினும் இங்கு கர்நாடக அரசின் அணுகுமுறை மற்றும் மனித வளம் என பலவும் உள்ளதால், இது சாத்தியமானது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் உள்கட்டமைப்பு குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும், கர்நாடகா வழங்கும் உள்கட்டமைப்பு வசதியினை வேறு யாரும் வழங்க முடியாது.
நிதி மையாக வளர்ச்சி
ஹீப்பள்ளி, தார்வாட், மங்களூரு, கலபுர்கி, பல்லாரி, துமகுரு மற்றும் மைசூருவில் 50000 ஏக்கர் நில வங்கி உள்ளது. ஷிவமொக்கா, விஜய்புரம் மற்றும் கார்வாரில் விமான நிலையங்கள் விரைவில் தொடங்கப்படும். 6,000 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கப்படும். பெங்களூரு ஐடி மையமாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது புற நகரில் கூட வளர்ச்சி உள்ளது. பெங்களுரு ஒரு பெரிய நிதி மையாக வளர்ச்சி காணும் என்றும் பொம்மை கூறினார்.
அடுத்த மாநாடு எப்போது
பெங்களூர் தவிர மற்ற மாவட்டங்கள் 70% முதலீடுகளை ஈர்த்துள்ளன. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் முதலீடுகளை ஈர்க்கும் அரசின் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி தெரிவித்துள்ளார். அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 2025ல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.