இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக Zoho நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் தென்காசியை தலைமையிடமாக கொண்டு Zoho நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. இவர் நீண்ட காலமாகவே இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி தேச வளர்ச்சிக்கு பங்களிப்பு தர வேண்டும் கூறி வருகிறார்.
விசா கட்டுப்பாடுகள், இந்தியர்களை வேற்று கிரகவாசிகள் என கூறுவது என அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியர்களை சீண்டி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு உத்தரவின்படி, ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் தனது அதிநவீன AI மாடல்களான Fable 5 மற்றும் Mythos 5 ஆகியவற்றை வெளிநாட்டினர் அதாவது அமெரிக்காவிற்குள் இருக்கும் மற்றும் வெளியே இருக்கும் பிற நாட்டவர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. இந்த மாடல்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி தவறான வழிகளில் இயக்க முடியும் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்க அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கையை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் தொழில்நுட்பத் துறை கண் விழிக்க வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார். இது குறித்து விளக்கமாக பதிவிட்டுள்ள அவர், ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பது இப்போது முழுமையாக தொழில்நுட்பத்தைச் சார்ந்துதான் உள்ளது என கூறியுள்ளார். முக்கியமான தொழில்நுட்பங்களுக்காக இனி நாம் மற்ற நாடுகளையோ அல்லது உலகமயமாக்கல் கொள்கையையோ நம்பியிருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா தன்னுடைய சொந்த பாதையை தானே தேடி கொள்ள வேண்டும் என கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டு AI நிறுவனங்களை நம்பியிருப்பதைத் தவிர்க்க வேண்டும். நமக்கு விற்கவே விரும்பாத ஒருவருக்கு நாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசாங்கமும் நிறுவனங்களும் பெரிய வெளிநாட்டு மாடல்களை நம்புவதை விட்டுவிட்டு, இந்திய மற்றும் பிற ஓபன்-சோர்ஸ் சிறிய AI மாடல்களைப் பயன்படுத்தி, அவற்றை நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். அதிநவீன AI மாடல்களை உருவாக்குவதற்கு 100 பில்லியன் டாலருக்கும் மேல் பெருமளவிலான நிதி தேவைப்படுகிறது. அதேபோல, அதற்குத் தேவையான அதிநவீன GPU-க்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அவற்றை வாங்குவதும் கடினம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சவால்களைச் சமாளிக்க, ஜோஹோ நிறுவனம் மிகக் குறைந்த செலவில் மாற்று வழிகளில் AI ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு சற்று காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகமயமாக்கல் குறித்த எண்ணத்தில் மூழ்கி இருப்பவர்கள் கண் விழித்து கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications

