அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தனது இந்திய கிளை நிறுவனமான ஜிஎம் இந்தியா தொழிற்துறை தகராறு சட்டம் 1947 பகுதி 25ஐ நடைமுறைப்படுத்தித் தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 1,419 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜிஎம் இந்தியா நிறுவனத்தின் முடிவை தொடர்ந்து ஊழியர்கள் யூனியன் அமைப்பு இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
1996 முதல் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா
அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தை 1996ஆம் ஆண்டு துவங்கியது. இந்தியாவில் பெரிய அளவிலான வர்த்தகம் இல்லாத காரணத்தாலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வது ஏற்புடையதாக இல்லாத நிலையிலும் இந்திய வர்த்தகத்தை மூட ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டது.
குஜராத் தொழிற்சாலை விற்பனை
இதன் படி 3 வருடங்களுக்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் துவங்கிய 2வது தொழிற்சாலையான குஜராத், ஹாலோல் பகுதியில் இருக்கும் உற்பத்தி தளத்தை முழுமையாகச் சீனாவின் SAIC நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுத் தற்போது MG Motors நிறுவனத்தின் உற்பத்தி தளமாக இயங்கி வருகிறது.
கடைசி ஜிஎம் தொழிற்சாலை
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் கடைசித் தொழிற்சாலையான புனே Talegaon தொழிற்சாலையை முழுமையாக மூடிவிட்டு சுமார் 2000 கோடி ரூபாய்க்கு சீனாவின் மிகப்பெரிய எஸ்பிஐ கார் தயாரிப்பு நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
1,419 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்நிலையில் புனே அருகில் இருக்கும் ஜிஎம் இந்தியா நிறுவனத்தின் Talegaon தொழிற்சாலையில் நீண்ட காலமாக ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியிலான பிரச்சனை இருந்து வந்த நிலையில் தற்போது நிர்வாகம் அதிரடியாக 1,419 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
உற்பத்தி நிறுத்தம்
Talegaon தொழிற்சாலையில் டிசம்பர் 24, 2020 முதல் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வருடத்திற்கு அதிகமாகக் காலகட்டத்திற்கு முன்பே ஜிஎம் இந்தியா நிர்வாகம் இத்தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் நிறுத்த உள்ளதாக நோட்டீஸ் அளித்துள்ளது.
10 கோடி ரூபாய் நஷ்டம்
இந்நிலையில் லாக்டவுன் நடைமுறையில் இருந்த காலமான டிசம்பர் 24, 2020 முதல் இத்தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், உற்பத்தி துவங்க எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த 4 மாதத்தில் உற்பத்தி செய்யாத பட்சத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் ஆகியவற்றின் மூலம் 10 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக ஜிஎம் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணிநீக்க கடிதம்
இதைத்தொடர்ந்து ஜிஎம் இந்தியா நிறுவனம் இந்தியா தொழிற்துறை தகராறு சட்டம் 1947 பகுதி 25ஐ நடைமுறைப்படுத்தி 1,419 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், ஜெனர்ல் மோட்டார்ஸ் ஊழியர்கள் அமைப்பின் செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது. மேலும் தொழிற்சாலை வாசலிலும் ஒட்டப்பட்டு உள்ளது.
50 சதவீத சம்பளம்
இந்தியா தொழிற்துறை தகராறு சட்டம் 1947 பகுதி 25ஐ நடைமுறைப்படுத்தியதன் வாயிலாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமும், முழுமையான கிராக்கிபடி-யும் வழங்கப்படும்.
ஊழியர்கள் அமைப்பு
ஊழியர்கள் அமைப்பிடம் ஜிஎம் நிர்வாகம் separation package குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்தும் ஊழியர்கள் அமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் நிர்வாகம் சட்டத்தின் வழியாகச் செல்ல முடிவு செய்துள்ளது என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கம்யூனிகேஷன் பிரிவின் சர்வதேச தலைவரான George Svigos தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா பிரச்சனை
இந்தியா சீனா இடையிலான வர்த்தக நட்புறவு இன்னும் முழுமையாகச் சீரடையாமல் இருக்கும் நிலையில் இந்தியாவிற்கு வர காத்திருக்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எப்போது அனுமதி கிடைக்கும் எனத் தெரியவில்லை.
விற்பனை ஒப்பந்தம்
ஜிஎம்- கிரேட் வால் மோட்டார்ஸ் தொழிற்சாலை விற்பனை ஒப்பந்தம் ஜனவரி 2020ல் செய்யப்பட்டாலும் அரசு அனுமதி இல்லாமல் GWM இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது. இருப்பினும் ஜெனரல் மோட்டார்ஸ் Talegaon தொழிற்சாலையின் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications