மும்பை: இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களுக்கு கொரோனாவில் கட்டம் சரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாக விமான சேவை நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு, போர் பதற்றம் போன்ற காரணங்களால் தான் வியாபாரம் அடி வாங்கும்.
ஆனால் இந்த முறை கொரோனா வைரஸால் அடி வாங்கி இருக்கிறது. எந்த அளவுக்கு அடி வாங்கி இருக்கிறது. அதற்கு கோ ஏர் என்ன செய்து இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சர்வதேச சேவை
கடந்த மார்ச் 17, 2020 செவ்வாய்க் கிழமை அன்று, கோ ஏர் விமான சேவை நிறுவனம் தன் சர்வதேச விமான சேவைகளை, வரும் ஏப்ரல் 15, 2020 வரை நிறுத்திக் கொள்வதாகச் சொன்னது. காரணம் கொரோனா வைரஸ் தான். சரி விமான சேவைகளை நிறுத்தி விட்டால் என்ன..? என்று கேட்கிறீர்களா.
வருவாய்
கோ ஏர் நிறுவனத்துக்கு வரும் வருவாய் எல்லாம் குறையத் தொடங்கிவிட்டது. நிறுவனத்துக்கான வருவாய் இல்லை என்றால், எப்படி அன்றாடம் செய்ய வேண்டிய செலவுகளைச் செய்ய முடியும். குறிப்பாக எப்படி ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க முடியும்..? அந்த பிரச்சனையைத் தான் இப்போது கோ ஏர் எதிர் கொண்டது.
வேலை நீக்கம்
மேலே சொன்ன கேள்விக்கு விடை, ஊழியர்களை நீக்குவது என முடிவு செய்தது. குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களை நீக்கத் தொடங்கி இருக்கிறது கோ ஏர். அதோடு சிலருக்கு, சம்பளம் கொடுக்காமல் கட்டாய விடுப்புகளும் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம். இப்படி சில பல ஐடியாக்களை வைத்து நிறுவனத்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது கோ ஏர்.
கடிதம்
கடந்த மார்ச் 16, 2020 அன்று, ஒப்பந்த ஊழியருக்கு அனுப்பிய கடிதத்தில் "எங்களால் எதிர்பார்த்த அளவுக்கு விமானங்களை இயக்க முடியவில்லை. இந்த சரிவை சமாளிக்க, எங்கள் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே உங்கள் வேலைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறது.
பிழைப்பு
மேலே சொன்ன கடிதம் வந்த ஊழியர் கடந்த ஆகஸ்ட் 2019-ல் தான், கோ ஏர் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகச் சேர்ந்தாராம். சேர்ந்த ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி வேலைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து வீட்டுக்கு அனுப்பினால் எப்படி..? என்று தான் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.