கேரளாவில் நேற்று நடைபெற்ற ஓணம் பண்டிகை சிறப்பு லாட்டரி குலுக்கலில் ரூ.25 கோடி பரிசு ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி வென்றவர் அவருக்கு ஒரு அட்வைஸ் செய்திருக்கிறார்.
தயவுசெய்து பரிசு பணத்தை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யவும் என்றும் உறவினர்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓணம் சிறப்பு லாட்டரி
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓணம் பண்டிகை சிறப்பு லாட்டரி குலுக்கல் கேரளாவில் நடைபெற்று வருகிறது என்பதும் அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் சிறப்பு குலுக்கள் நேற்று நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசு ரூ.25 கோடி
கேரள நிதியமைச்சர் பாலகோபாலன் அவர்கள் இந்த ஆண்டு ஓணம் சிறப்பு குலுக்கலில் முதல் பரிசு பெற்ற வெற்றியாளரை தேர்வு செய்தார். இந்த நிலையில் முதல் பரிசு பெற்றவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனுப் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஊடகங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. லாட்டரி டிக்கெட் விழுந்த சிறிது நேரத்தில் அவர் கேரளாவில் ஹீரோவாகிவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியவில்லை
ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அனுப், 'பரிசுத்தொகை ரூ.25 கோடியை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் இருப்பினும் என்னுடைய குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முறையில் முதலீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பரிசு பெற்றவர்
இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே ஓணம் பண்டிகைம் சிறப்பு குலுக்கலில் ரூபாய் 12 கோடி பரிசு பெற்ற ஜெயபாலன் என்பவரும் ஆட்டோ டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு 25 கோடி ஜாக்பாட் பரிசு பெற்ற அனுப் அவர்களுக்கு கடந்த ஆண்டு பரிசு பெற்ற ஜெயபாலன் ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.
பிக்சட் டெபாசிட்
தயவுசெய்து உங்களுக்கு கிடைத்து இருக்கும் பரிசு பணம் அனைத்தையும் குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு பிக்சட் டெபாசிட் செய்து விடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் குடும்பத்தினரை முதலில் நன்றாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்
உதவி என்று கேட்டு வரும் உறவினர்களுக்கு நீங்கள் உதவி செய்தால் சிக்கல்தான் ஏற்படும் என்றும், எனது அனுபவத்தில் நான் ஒரு சில உறவினருக்கு உதவி செய்தேன் என்றும் ஆனால் உதவி கிடைக்காத உறவினர்கள் என் மேல் கோபம்அடைந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.12 கோடி பரிசு பெற்ற போதிலும் ஜெயபாலன் தற்போதும் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவுரை
ரூ.25 கோடி பரிசு பெற்ற கேரளாவை சேர்ந்த அனுப், கடந்த ஆண்டு பரிசு பெற்ற ஜெயபாலன் அறிவுரையை ஏற்று பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications