இந்திய விமானங்கள் கொரோனா பாதிப்பால் தனது சேவைகளை உள்நாட்டில் மட்டுமே முடங்கியுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்வுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதேவேளையில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்தியா விமானச் சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் நிலையில், நீண்ட காலத்திற்குப் பின் இந்திய பங்குச்சந்தைக்கு ஒரு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் ஐபிஓ வெளியிட உள்ளது. இது ஐபிஓ முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோஏர்-ன் ஐபிஓ திட்டம்
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான கோஏர் வர்த்தக விரிவாக்கம் செய்யவும், சேவை தடங்களை அதிகப்படுத்தவும் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பெறப்படும் முதலீட்டை வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
கோஏர் ஐபிஓ தோல்வி
வாடியா குரூப்-ன் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோஏர் 2017ஆம் ஆண்டு முதல் பல முறை ஐபிஓ வெளியிட முயற்சி செய்து தோற்றுப்போன நிலையில் தற்போது மீண்டும் ஐபிஓ வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து சந்தையைச் சார்ந்த முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்யப் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
3,000 கோடி ரூபாய் முதலீடு
இந்த ஐபிஓ மூலம் வாடியா குரூப்-ன் கோஏர் நிறுவனம் சுமார் 3,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற முடியும் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ-விற்காக வாடியா குழுமம் சிட்டி குரூப், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், மோர்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்களை நிர்வாகப் பணிகளுக்காக நியமித்துள்ளது.
கடன் அளவு
தற்போது வர்த்தகச் சந்தையின் இருக்கும் சூழ்நிலை முதலீட்டு ஈர்க்க மிகவும் சரியானதாக இருக்கும் எனவும், இந்த ஐபிஓ மூலம் நீண்ட கால நிதி ஆதாரத்தையும், கடன் அளவையும் குறைக்க முடியும் என வாடியா குரூப் தெரிவித்துள்ளது. இந்த ஐபிஓ திட்டத்திற்காக வாடியா குழுமம் சுமார் 30 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடியு செய்துள்ளது.
வாடியா குரூப் முக்கிய வர்த்தகங்கள்
வாடியா குரூப் கோஏர் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் பாம்பே பூம்ரா, பாம்பே டையிங், பிரிட்டானியா, நேஷனல் பெராக்சைட், பாம்பே ரியாலிட்டி ஆகிய நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கிய வர்த்தகக் குழுமங்களில் வாடியா குரூப் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
300 தினசரி விமானப் பயணங்கள்
சுமார் 300க்கும் மேற்பட்ட தினசரி விமானப் பயணச் சேவைகளை அளித்து வரும் கோஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் சுமார் 8.6 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது. சுமார் 36 இடங்களுக்கு விமானச் சேவை அளிக்கும் கோஏர் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பின் காரணமாக இந்நிறுவனத்தின் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது.
கோஏர் நிர்வாகத் தலைவர் மாற்றம்
கொரோனா காலத்தில் உலகளவில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விமானச் சேவை நிறுவனங்களுக்கான வங்கியின் கடனும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கிய கோஏர் பல்வேறு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட பின்பு வர்த்தகத்தைப் பெற துவங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் கோஏர் சிஇஓ பதவியிலிருந்து வினய் துபே-வை நீக்கவிட்டு கௌசிக் கோனா-வை நியமித்தது.