தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒருபுறம் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து இருக்கின்றன.
இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என திமுக மிகத் தீவிரமாக இருக்கிறது, இழந்த ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என அதிமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே மக்களை கவரக்கூடிய வகையிலான அறிவிப்புகளை இரண்டு கட்சிகளுமே தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு 5000 ரூபாயை வங்கிக் கணக்கில் வரவு வைத்து இன்ப அதிர்ச்சி தந்தது. பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3000 ரூபாயும், கோடைகால சிறப்பு தொகை எனக் கூறி ஒரு 2000 ரூபாயும் என மொத்தமாக 5000 ரூபாயை வரவு வைத்தது தமிழ்நாடு அரசு.
தேர்தல் நடைபெற இருப்பதால் எதிர்க்கட்சிகள் பயனாளிகளுக்கு இந்த தொகைகள் சென்று சேர்வதை தடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் நாட திட்டமிட்டு இருப்பதால் முந்திக்கொண்டு தன்னுடைய அரசு 5000 ரூபாயை மகளிர் வங்கி கணக்கில் வரவு வைத்ததாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அப்போது தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் எதிர் வரக்கூடிய தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் தற்போது 1000 ரூபாயாக இருக்கக்கூடிய மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் எனக் கூறியிருந்தார்.
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றாக குலவிளக்கு என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதில் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வங்கியிலேயே நேரடியாக வரவைக்கப்படும் என்று அறிவித்தார். எனவே எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமை தொகைக்கு கிடைப்பது தற்போது உறுதியாகிவிட்டது.

அடுத்த கட்டமாக கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை சட்டமன்ற தேர்தலிலேயே திமுக, 5 பவுன் வரையில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே இந்த முறையும் கூட்டுறவு கடன்களில் வைக்கப்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்வத தொடர்பான அறிவிப்பினை திமுக வெளியிடும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏராளமான மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டுறவு வங்கிகளில் தங்களுடைய நகைகளை அடகு வைத்து வருகிறார்கள். எப்படி இருந்தாலும் தேர்தல் முடிந்தவுடன் தங்களுடைய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்ப்பில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிக அளவில் நகைக்கடன் வழங்கி இருப்பதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் அரசும் நகைக்கடன்கள் குறித்த லிஸ்ட்டினை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. நகைக்கடை மட்டுமில்லாமல் விவசாய கடன் தொடர்பான லிஸ்டையும் அரசு கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் நகை கடனோடு விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகிறதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனவே கூடிய விரைவில் திமுக தரப்பில் கடன்கள் தள்ளுபடி தொடர்பான ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியமைத்தால் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடன் ரத்து செய்யப்படும், மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். எனவே திமுகவும் கடன் தள்ளுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications