தங்க நகை கடன் கொடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று திடீரென தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 180 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் வேலைவாய்ப்பு அதிகரித்து இருப்பதாகவும், பல நிறுவனங்கள் பல வேலையாட்களை புதிதாக எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில நிறுவனங்கள் ஏற்கனவே தங்களிடம் பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளர்களை நீக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரூப்பெக்
அந்த வகையில் தங்க நகைக்கடன் கொடுத்து வரும் நிதி உதவி நிறுவனங்களில் ஒன்றான ரூப்பெக் என்ற நிறுவனம் 180க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரூப்பெக் நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கிவரும் நிலையில் திடீரென 180க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உள்ளது.
பணிநீக்கம்
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, 'ஆழ்ந்த வருத்தத்துடன் 10 முதல் 15 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாய முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஊழியர்கள்
மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தன்னலமற்ற முறையில் எங்களது நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்றும், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் கட்டாயம் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செலவு
ஆனால் அதே நேரத்தில் செலவுகளை குறைக்கவும், மூலதனத்தை அதிகரிக்கவும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு ஊழியர்களுக்கு பாதகமாக இருந்தாலும் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேறு வகையில் நாங்கள் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதி பற்றாக்குறை
முத்தூட் போன்ற நகை கடன் கொடுக்கும் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபத்துடன் இயங்கி கொண்டிருக்கும் நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனமான ரூப்பெக் நிறுவனம் திடீரென நிதி பற்றாக்குறை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.