சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.29.096 என்ற அளவுக்கு, விற்பனையாகிறது.
அதாவது தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. சென்னையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,637க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தளவில், விலை 10 காசுகள் குறைந்து ரூ.48.30க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர்ந்து, ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை என்பது இறங்குமுகத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. பின்னர், ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரத்தையும், பிறகு 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது.
செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டி புது சாதனை படைத்தது தங்கம் விலை. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேநேரம், நவம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமிற்கு17 ரூபாய் குறைந்து 3,637 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 29,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 29.096 ரூபாயாக விற்பனையாகிறது.
அமெரிக்க எம்பிக்கள் ஹாங்காங் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால், அமெரிக்க-சீனா வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகிவிடக்கூடும் என்ற கவலை முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு குறைவு என தெரிகிறது.
பல மாதங்களாக நிலவும் வர்த்தக போர் காரணமாக, தங்கம் விலை கூடி வருகிறது. அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுவது தங்கம்தான். எனவேதான், அமெரிக்கா-சீனா வர்த்தக போரால், உலக சந்தைகளில் இந்த ஆண்டு சுமார் 14% அதிகரித்துள்ளது தங்கம் விலை.
இந்தியாவில், தங்கம் விலை 20% க்கும் அதிகமாக உயர்ந்தது. இறக்குமதி வரி உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிழப்பு ஆகியவற்றால் இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் கூட காரணமாகும்.