டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் இன்னும் என்ன நிலைக்கு செல்லப் போகிறதோ? தெரியவில்லை.
இன்றைய நிலவரப்படி 96,169 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,029 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க நான்காவது முறையாக லாக்டவுன் 4.0 நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தறை முறை நீட்டிக்கப்பட போகிறதோ? தெரியவில்லை.
ஒரு புறம் லாக்டவுனில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க, பலவேறு விதமான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளது.
முடக்கம் தான்
ஆக லாக்டவுனில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கூட, மறுபுறம் தொழில்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் 100 சதவீத செயல்பாட்டினை ஆரம்பிக்கவில்லை எனலாம். சில இடங்களில் தொழிற்சாலைகள் திறந்திருந்தாலும், தேவையான மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் இன்னும் முடங்கித் தான் இருக்கின்றன.
ஜிடிபி கணிப்பு
கோல்டுமேன் சாச்ஸ் ஜூன் காலாண்டில் மோசமான செயல்பாடு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமான சரிவினைக் காணக்கூடும். ஜிடிபி விகிதத்தில் 45 சதவீத வீழ்ச்சியினைக் காணக்கூடும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மோசமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் காலாண்டில் இப்படி மோசமான வளர்ச்சியினைக் காணக்கூடும் என்றும் கூறியுள்ளது.
பழைய கணிப்பு எவ்வளவு?
முன்னதாக இந்த நிறுவனம் ஜிடிபியில் 20 சதவீத சரிவினைக் காணும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் இப்படி படு வீழ்ச்சி கண்டாலும், செப்டம்பர் காலாண்டில் மிக வேகமாக வளர்ச்சி காணும் என்றும் கோல்டுமேன் சாச்ஸ் மதிப்பிட்டுள்ளது. அதோடு 2021ம் நிதியாண்டின் டிசம்பர் மற்றும் மார்ச் காலாண்டில் வளர்ச்சி முறையே 14% மற்றும் 6.5% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி இறக்குமதி வீழ்ச்சி
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பிஎம்ஐ 5.4 ஆக இருந்தது. அதோடு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் தொடங்கிய நிலையில், தொழில் துறை உற்பத்தி விகிதம் 16.7% சரிந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விநியோக சங்கிலியில் மாற்றம்
இதற்கிடையில் விநியோக சங்கிலிகள் சற்று ஏற்றம் கண்டு வரும் நிலையில், செயல்பாடுகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. மேலும் குறைவான தேவை மற்றும் கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் செயல்படுவது கடினமாகியுள்ளது. இதனால் தொடர்ச்சியாக வீழ்ச்சியினைக் தான் காண இது வழிவகுக்கும்.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பல நாட்களாகவே பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் பற்றிய விரிவான அறிக்கையினை வெளியிட்டார். இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள கோல்டுமேன் சாச்ஸ், 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்குவிப்பு திட்டம் உடனடியாக பொருளாதாரத்தில் எதிரொலிக்காது. உண்மையில் உலக வங்கி கணிப்பின் படி, மொத்த ஜிடிபி விகிதத்தில் 10%த்தினை தான் ஊக்குவிப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.