2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாகடவுனில் பெரும்பாலான துறைகள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணியாற்றத் துவங்கியதன் காரணமாக ஐடி துறை எவ்விதமான வர்த்தகப் பாதிப்புகளும் இல்லாமல் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் கணிப்புகளை விடவும் அதிகளவிலான லாபத்தைப் பெற்றனர். இது முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ள நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐடி துறை
2021-22ஆம் நிதியாண்டில் பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுகள் அளிக்கப்படும் நிலையிலும், தடுப்பு மருந்து உலகம் முழுக்கப் போடப்பட்டு வரும் காரணத்தால் கொரோனா தொற்றும் பெரும் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலகம் முழுவதிலும் டெல் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது.
4 ஐடி நிறுவனங்கள்
இதை ஈடுசெய்யும் பொருட்டு நாட்டின் முன்னணி 4 ஐடி நிறுவனமான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ 2021-22ஆம் நிதியாண்டில் சுமார் 91,000 பேரை புதிதாகப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கல்லூரியில் நடத்தப்படும் கேம்பஸ் இண்டர்வியூவ் வாயிலாகப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் அறிவிப்பு
பொதுவாக ஒரு நிதியாண்டு துவங்கும் முன்னரே இந்த வருடத்தில் எத்தனை பேரை பணியில் சேர்க்க உள்ளது என்பதை வெளியிடும் அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவரும், குளோபல் ஹெச்ஆர் பிரிவு தலைவரான மிலிந்த் லகாட் இந்த வருடம் சுமார் 40,000 பேரை பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்போசிஸ் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து இன்போசிஸ் 24,000 மாணவர்கள் அல்லது பிரெஷ்ஷர்களையும், ஹெச்சிஎல் 15,000 பேரையும், விப்ரோ 12,000 பேரையும் பணியில் சேர்க்க உள்ளது. டாப் 4 நிறுவனங்களில் இன்போசிஸ் மற்றும் ஹெச்சிஎல் மட்டுமே கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் அதிகமாக ஊழியர்களைப் பணியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் தேவை
இதன் மூலம் இந்திய ஐடி துறை மீண்டும் புதிய உச்சத்தை அடையத் தயாராகி வருகிறது. குறிப்பாக உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் தேவை அதிகரித்துள்ள இந்த நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் வளர்ச்சி அடையப் பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளது.
ஐடி துறை வளர்ச்சி
இதன் மூலம் 2021-22 நிதியாண்டில் முடிவில் இந்திய ஐடித்துறையில் வர்த்தக மதிப்புக் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் ஐடி துறையைச் சார்ந்து இருக்கும் வர்த்தகங்களும் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.