இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொண்டு இருந்த வேளையில், குறிப்பாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தைக்கு அடுத்தடுத்து வந்துகொண்டு இருந்த நிலையில் பேடிஎம் ஐபிஓ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையில்லை.
ஐபிஓ-விற்குப் பின்பு தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துக் கொண்டு இருந்த பேடிஎம் நிறுவனத்திற்கு இன்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
பேடிஎம் நிறுவனத்தின் கிளை அமைப்பான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-க்கு இந்திய ரிசர்வ் வங்கி Scheduled Bank என்ற அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. இதோடு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம் 1934ல் இரண்டாவது பகுதியில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேர்க்கப்பட்டு உள்ளது.
Scheduled Bank அங்கீகாரம்
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-க்கு Scheduled Bank என்ற அங்கீகாரம் கிடைத்தது மூலம் புதிய வர்த்தகச் சந்தைக்குள் எளிதாக நுழைய முடியும். உதாரணமாக ஆர்பிஐ வட்டி விகிதத்தில் கடன், வைப்பு நிதி சேவைகளை அளிக்க முடியும். இதேபோல் அரசு அமைப்புகளின் நிதி சேவையிலும் இணைந்து செயல்பட முடியும், கிட்டதட்ட எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் போன்று பெரும்பாலான சேவைகளை வழங்க முடியும்.
சதீஷ் குமார் திட்டம்
ரிசர்வ் வங்கி கொடுத்த Scheduled Bank அங்கீகாரத்தின் வாயிலாகப் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இந்தியாவில் வங்கி சேவை கிடைக்காத மற்றும் வங்கி சேவைகளைப் பெற முடியாத மக்களுக்குத் தனது புதிய வங்கி சேவைகளை அளிக்கத் திட்டமிட்டு உள்ளது என இதன் நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ-வான சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் நிதியியல் சேவை
இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவைகள் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும் இந்தியாவில் இன்னமும் பல பகுதிகளில் மக்களுக்கு முழுமையான வங்கி சேவைகள் கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையை மாற்றப் பல டிஜிட்டல் நிதி சேவை நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
போன்பே Vs பேடிஎம்
பேடிஎம் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான போன்பே இந்தியாவின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனத்திற்குத் தற்போது தனது நிதியியல் சேவைகளை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் கொண்டு செல்ல பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பேடிஎம் பங்குகள்
ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை குறித்த கட்டணங்கள் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்தது. இதன் எதிரொலியாகக் காலையில் இருந்து 2 சதவீதம் சரிவில் இருந்த பேடிஎம் பங்குகள், மாலை Scheduled Bank அங்கிகாரம் பெற்ற பின்பு பங்கு விலை தடாலடியாக 1553 ரூபாயில் இருந்து 1645 ரூபாய் வரையில் உயர்ந்தது.