2020ல் வர்த்தகம் பாதிப்பு, வருமானம் சரிவு, புதிய வர்த்தகம் கிடைப்பதில் தடுமாற்றம் எனப் பலவேறு காரணங்களுக்காக இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதிய உயர்வு, போனஸ் தொகை ஆகியவற்றில் வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது.
இதேவேளையில் பல முன்னணி நிறுவனங்கள் வர்த்தகப் பாதிப்புக் காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த காரணத்தால் ஊழியர்களும் சம்பள உயர்வில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் இந்த வருடம் வர்த்தகப் பிரச்சனைகள் அனைத்தும் குறைந்துள்ள நிலையில் இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தச் சம்பள உயர்வு குறித்து ஒரு முக்கியமான ஆய்வை Aon நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு
உலகளாவிய தொழில்சார்ந்த அமைப்பான Aon செய்துள்ள ஆய்வில் 2021ல் இந்திய நிறுவனங்கள் சராசரியாக 7.7 சதவீதம் அளவிலான சம்பள உயர்வை அளிக்கும் என்றும், சிறந்த ஊழியர்களுக்கு 1.6 மடங்கு அதிகச் சம்பள உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 38 துறையில் சார்ந்த 1200 நிறுவனங்கள் சேகரிக்கப்பட்ட நிறுவனங்களின் தகவல்களைத் தொகுத்து Aon அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்கள் பொதுவாக 5 முதல் 6 சதவீதம் என்ற சராசரி அளவிலான சம்பள உயர்வை மட்டுமே அளிக்கும் நிலையில் இந்த வருடம் சற்று அதிகமாகக் கொடுக்கத் தயாராகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2021ல் கடந்த ஆண்டை போல் அல்லாமல் அனைத்து நிறுவனங்களும் சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது மற்றொரு குட் நியூஸ்.
2020ன் மோசமான நிலை
2020ல் கொரோனா தொற்று மற்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் இந்தியாவில் பல நிறுவனங்கள் கடுமையான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டது, இதனால் சில நிறுவனங்கள் சம்பள உயர்வு கொடுப்பதைத் தவிர்த்தது. ஆனால் இந்த வருடம் வழக்கம் போல் அனைத்து நிறுவனங்களும் சம்பள உயர்வைக் கொடுக்கத் தயாராகியுள்ளது.
7.7 சதவீத சம்பள உயர்வு
2020ல் இந்திய நிறுவனங்கள் 6.4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வைக் கொடுத்த நிலையில், இந்த வருடம் 2020ஐ விடவும் அதிகமாக 7.7 சதவீதம் அளவிலான சம்பள உயர்வைக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
வெளிநாட்டு நிறுவனங்களின் நிலை
மேலும் இந்த வருடம் ஜப்பான், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 3.1 முதல் 5.6 சதவீதம் அளவிலான சம்பள உயர்வை அளிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இந்திய நிறுவனங்கள் 7.7 சதவீத சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது.
துறைவாரியான சம்பள உயர்வு
மேலும் இந்த வருடம் சராசரியாக ஈகாமர்ஸ், வென்சர் கேப்பிடல் முதலீட்டில் இயங்கும் நிறுவனங்கள் 10.1 சதவீதம் அளவிலான சம்பள உயர்வையும், டெக் துறை நிறுவனங்கள் 9.7 சதவீதமும், ITES நிறுவனங்கள் 8.8 சதவீதமும், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் துறை சார்ந்த நிறுவனங்கள் 8.1 சதவீதமும், கெமிக்கல் மற்றும் பார்மா நிறுவனங்கள் 8 சதவீதமும், நிதி மற்றும் நிதியியல் சேவை நிறுவனங்கள் 6.5 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை அளிக்க உள்ளது.