இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் பணியமர்த்தல் விகிதம் என்பது சற்று நிலையான வளர்ச்சியினைக் கண்டு வருகின்றது.
பல்வேறு துறைகளும் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சி நிலையை எட்டியுள்ளன. இதற்கிடையில் பணியமர்த்தல் விகிதமானது ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பணியமர்த்தலில் சீரான வளச்சி
இது குறித்து லிங்க்ட் இன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் பணியமர்த்தல் செயல்பாடு என்பது சீராக மீட்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பணியமர்த்தல் விகிதம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட சுமார் 65% அதிகரித்துள்ளது. லிங்க்ட்இன் இந்தியா - தொழிலாளர் சந்தை (ஜூலை 2021) அறிக்கையின் படி, முதல் மற்றும் இரண்டாவது கட்ட கொரோனா பரவல் காரணமாக பணியமர்த்தலில் மோசமான சரிவு ஏற்பட்டது.
தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வேலை சந்தை
பலரும் அந்த காலக்கட்டத்தில் வேலையினை இழந்து வந்தனர். எனினும் தற்போது அது சீரான மீள்ச்சியை கண்டு வருகின்றது.
2019ம் ஆண்டில் கொரோனாவிற்கு முன்பு ஒப்பிடும்போது, மே 2021ம் ஆண்டில் பணியமர்த்தல் என்பது 35% அதிகமாக இருந்தது. இது ஜூன் 2021 இறுதியில் 42% அதிகரிப்பும், ஜுலை மாதத்தில் 65% வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
டாப் லெவலில் ஐடி துறை
இவ்வாறு பணியமர்த்தப்பட்ட துறைகளில் ஐடி துறையானது முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து உற்பத்தி மற்றும் ஹார்டுவேர் துறைகளில் அதிகளவில் உள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தற்போது கண்டு வரும் இந்த வளர்ச்சி விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. அதுவும் சற்று வலுவான வளர்ச்சியாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புதிய பல வாய்ப்புகள் திறக்கப்படலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
டேட்டா மற்றும் கிளவுட் துறையில் மாற்றம்
குறிப்பாக டேட்டா மற்றும் கிளவுட் துறையில் மாற்றங்கள் முறையே 54% மற்றும் 57% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் காரணமாக மக்கள் வேலைகளை பெறுவதில் பெரும் வீழ்ச்சி இருந்து வந்தது. 2020 ஏப்ரல் மாதத்தில் கிட்டதட்ட 48% சரிவு இருந்தது.
ஆனால் தற்போது இந்த விகிதமானது குறைந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி பாதையில் இந்தியா
குறிப்பாக கடந்த மார்ச் 2021ல் இந்த விகிதம் 61% அதிகரித்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது கடந்த 4 மாதங்களில் நிலை பெற்றுள்ளது. மொத்தத்தில் வேலை தேடுபவர்களுக்கு இது மிக நல்ல செய்தி என்றே கூறலாம். ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு பெருகினாலேயே, அந்த நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதாகத் தான் அர்த்தம். அந்த வகையில் இந்த ஆய்வானது இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதை காட்டுகிறது.
ஐடி துறை முக்கிய பங்கு வகிக்கும்
குறிப்பாக ஐடி துறையில் நிலவி வரும் மேம்பட்ட போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருதி வருகின்றனர். ஆக ஐடி துறையினருக்கு வேலை வாய்ப்பு என்பது இன்னும் அதிகமாக இருக்கும். தற்போது ஐடி துறையில் அட் ரிசன் விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில், இன்னும் பணியமர்த்தலை அதிகரிக்க இது வழிவகுக்கும். ஆக இந்த பணியமர்த்தலில் ஐடி துறை என்பது முக்கிய பங்கு வகிக்கலாம்.


Click it and Unblock the Notifications