இன்று சர்வதேச நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது எனில், அதற்கு முக்கிய காரணம் கொரோனா தான். கொரோனாவினால் நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
ஒரு புறம் இப்படி எனில், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதியின்மையால் இந்தியா மூச்சுத் திணறி வருகின்றது.
இப்படி ஒரு நிலையில், கடந்த சில நாட்களாகவே நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகளில் ஒன்று ஆக்சிஜன். ஆக்சிஜன் இன்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள் தவிக்கும் தவிப்பினை பலரும் பார்த்திருக்கலாம். இந்த நிலையில் மத்திய அரசு, மாநில அரசுகளும் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மாருதி சுசூகியின் திட்டம்
பல கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தியினை தொடங்கியுள்ளன. தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்தும் வருகின்றன. அரசும் பல இடங்களில் புதியதாக ஆக்சிஜன் உற்பத்தியினை தொடங்க அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, அதன் ஹரியான ஆலையில் வாகன உற்பத்தியினை தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.
திணறும் மக்களுக்காக ஆக்சிஜன் உற்பத்தி
வாகன உற்பத்தியை நிறுத்திய கையோடு, ஆக்சிஜன் உற்பத்தியினை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆலை பராமரிப்புக்காக ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது இந்தியாவில் மக்கள் ஆக்சிஜனுக்காக தள்ளாடி வரும் நிலையில், அதனை முன் கூட்டியே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எப்போது தொடக்கம்
இதனால் ஹரியானாவில் உள்ள மாருதியின் அனைத்து ஆலைகளும் மே 1 முதல் மே 9 வரை அதன் ஆலை பராமரிப்புக்காக பணி நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதாகவும் அறிவித்துள்ளது. கார் உற்பத்தியின் போது, மாருதி சுசூகி அதன் தொழிற்சாலைகளில் சிறிய அளவிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படும்.
உயிரை காப்பாற்ற பயன்படும்
தற்போது உள்ள நெருக்கடியான நிலையில், கிடைக்கக்கூடிய குறைந்த அளவிலான ஆக்சிஜனும், மக்கள் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என மாருதி தெரிவித்துள்ளது. இதே போல சுசூகி மோட்டார் குஜராத் நிறுவனமும் இதே முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் மாருதியின் இந்த முடிவுக்கு ஒரு சல்யூட் வைப்போமே.