சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவித்த நாளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 2 நாள் குறைந்தது.
இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பின்பு தற்போது 5 நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் இருக்கிறது.
5 நாட்களாக மாற்றமில்லை
திங்கட்கிழமை 5வது நாளாக நாட்டின் பெரு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படும் காரணத்தால், விலை உயர்வு பிரச்சனை குறைந்துள்ளது. இதனால் மக்களின் அதிகப்படியாகச் செலவு செய்ய வேண்டிய நிலை மாறியுள்ளது.
சென்னையில் விலை நிலவரம்
சென்னை விலை நிலவரத்தின் படி மார்ச் 23 வரையில் சுமார் 24 நாட்கள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் விலை 93.11 ரூபாயாக இருந்தது. 24ஆம் தேதி 92.95 ரூபாயாகவும், 25ஆம் தேதி 92.77 ரூபாயாகத் தொடர்ந்து 2 நாள் குறைந்தது.
இதன் பின்பு 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் இதை 92.77 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 5 நாட்களாக 86.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை என்ன..?
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று டெல்லியில் 90.78 ரூபாயும், பிற நகரங்களைக் காட்டிலும் மும்பையில் அதிகப்படியாக 97.19 ரூபாயும், சென்னையில் 92.77 ரூபாயும், கொல்கத்தாவில் 90.98 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் 81.10 ரூபாய்க்கும், மும்பையில் 88.20 ரூபாய்க்கும், சென்னையில் 86.10 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 83.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜிஎஸ்டி பிரச்சனை
இந்தியாவில் நீண்ட காலமாக எரிபொருட்களைச் சரக்கு மற்றும் சேவை வரி பிரிவுக்குள் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு இதுகுறித்து எவ்விதமான முடிவையும் எடுக்காமல் மறுத்து வருகிறது. இந்தியாவில் சுமார் 5 எரிபொருள் இன்னும் ஜிஎஸ்டிக்குள் வராமல் உள்ளது.
அதீத வரி விதிப்பு
இதன் மூலம் எரிபொருள் மீது மாநில அரசுகள் தனது விருப்பம் போல் பழைய மறைமுக வரிக் கீழ் மதிப்புக்கூட்டு வரியை விதித்து அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது. இதேபோல் மத்திய அரசும் கடந்த சில வருடங்களாகவே எரிபொருள் மீதான கலால் வரியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை தடுமாற்றம்
இதோடு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருள் விலையை நிர்ணயம் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது சர்வதேசச் சந்தை விலை நிலவரம் தான் என்றால் மிகையில்லை. இந்நிலையில் OPEC நாடுகள் உற்பத்தி குறைப்புச் செய்ய முடிவு எடுத்தது, சூயல் கால்வாய் பிரச்சனை, அமெரிக்காவின் டீப் பிரீஸ் நிலை ஆகியவை கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 60.08 டாலருக்கும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 63.94 டாலருக்கும், OPEC கச்சா எண்ணெய் விலை 61.63 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 4 நாட்கள் முன்னர் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை அளவு 62.12 டாலருக்கு வாங்கியுள்ளது.