சொந்த வீடு என்பது பலருக்கும் ஒரு சவாலான விஷயமே. ஏனெனில் பலருக்கும் இது நிறைவேறா கனவாகவே இருக்கும்.
இதனால் நம்மில் பலருக்கும் இது தான் வாழ் நாள் கனவாகவே இருக்கும். அப்படியான நிறைவேறா கனவினை நனவாக்க இது தான் சரியான நேரம் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் வீடு கட்ட வேண்டும் என்றால் அங்கு முதலாவது தடையாக நிற்பது நிதி பிரச்சனை தான். அந்த நிதி பிரச்சனையை தீர்க்க ஒரு வழி வீட்டுக் கடன்.
இது சரியான நேரம்
அந்த கடனும் குறைந்த வட்டியில், பல்வேறு சலுகைகளுடன் கிடைக்கிறது எனில், இது சரியான வாய்ப்பு என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள். அதிலும் தற்போது விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு வங்கிகளும் சலுகைகளை வழங்க ஆரம்பித்துள்ளன.
எஸ்பிஐ-யில் வட்டி குறைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. தற்போது வட்டி விகிதத்தை 6.70% ஆக குறைத்துள்ளது. வட்டி குறைப்பு மட்டும் அல்ல, செயல்பாட்டுக் கட்டணத்தினையும் 100% வரை தள்ளுபடி செய்துள்ளது. இது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.
சிபில் ஸ்கோரினை பொறுத்து மாறுபடும்
எனினும் இந்த வட்டி சலுகையானது அவரவர் சிபில் ஸ்கோரினை பொறுத்து இருக்கும்.வீட்டு கடன் வழங்கும் முன்னணி வங்கியாக இருக்கும் எஸ்பிஐ, தொடர்ச்சியாக அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகின்றது. ஆக தேவை இருக்கும் பட்சத்தில் இது வீட்டு கடன் வாங்க சரியான நேரமாகவும் பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்
எஸ்பிஐ-யின் இந்த அதிரடியான வட்டி குறைப்பினால், மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ தொகையானது குறையும். நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.70% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேலாக வீட்டு கடன் பெறும்போது முன்னதாக 7.15% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் தற்போது எஸ்பிஐ அந்த அதிகபட்ச வரம்பினையும் நீக்கியுள்ளது. ஆக நீங்கள் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினாலும் 6.70% வட்டி விகிதத்தினை செலுத்த வேண்டியிருக்கும்.
மிக நல்ல வாய்ப்பு
எஸ்பிஐ-யின் இந்த சலுகையானது பண்டிகை சீசனை முன்னிட்டு, இந்த சலுகையினை அறிவித்துள்ளது. இந்த சலுகையானது அதிகளவிலான கடன் வாங்க நினைப்பவர்களுக்கு 45 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைவாக கிடைக்கும். மிகப்பெரியளவில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இது உண்மையில் மிக நல்ல வாய்ப்பு எனலாம்.
ரூ.6 லட்சத்துக்கு மேல் மிச்சம்
எஸ்பிஐ-யில் வீட்டுக் கடன் வாங்கும் ஒருவர் 75 லட்சம் ரூபாய், 30 வருட காலத்திற்கு வாங்கும்போது, 8 லட்சம் ரூபாயினை மிச்சப்படுத்த முடியும். முன்னதாக சம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்களுக்கு என வட்டி விகிதம் மாறுபடும். சம்பளம் அல்லாதவர்களுக்கு வட்டி விகிதம் என்பது சம்பளதாரர்களை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் தற்போது அப்படியில்லை. ஆக இதனால் ஊழியர்கள் அல்லாதவர்கள் தற்போது கூடுதல் வட்டி செலுத்த தேவையில்லை.
யாருக்கெல்லாம் சலுகை
பொதுவாக இது போன்ற கடன் சலுகைகளை பெற ஊழியர்கள் அல்லாதவர்கள், ஊழியர்கள் என பார்த்து அதற்கு ஏற்ப சலுகைகள் தீர்மானிக்கப்படும். சம்பளம் வாங்குபவர்களை விட, மற்றவர்கள் கூடுதலாக வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆனால் தற்போது அதனை பொருட்படுத்தாமல் எஸ்பிஐ அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளது.