இந்தியாவில் சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்து வந்த வேலைவாய்ப்பின்மை அளவீடுகள் தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதற்கு அர்த்தம் வேலைவாய்ப்பு இல்லாமலும், வேலைவாய்ப்புகளை இழந்த மக்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புக் கிடைக்கத் துவங்கியது என்பது பொருள்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாலே போதுமானது. நாட்டின் பொருளாதாரம் தானாக வளர்ச்சி அடையத் துவங்கும்.
CMIE அமைப்பு
CMIE அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் மே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 11.90 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் 13 உடன் முடிந்த வாரத்தில் இதன் அளவீடு 8.7 சதவீதமாகக் குறைந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு
நகரப்புறங்களைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் பருவ மழை சிறப்பாக இருக்கும் காரணத்தாலும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் உருவாகி வருகிறது. இதனால் கிராமப்புறத்தில் அதிகளவிலானோர் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று
இந்தத் திடீர் மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் படிப்படியாகக் குறைந்து வரும் காரணத்தால், மாநில அரசுகள் அடுத்தடுத்து லாக்டவுன் கட்டுப்பாடுகளைக் குறைத்து வருகிறது.
லாக்டவுன் தளர்வு..!
இதனால் பெரும்பாலான துறைகள் தங்களது வர்த்தகத்தை மீண்டும் துவக்கியுள்ளது. முழுமையாக வர்த்தகத்தைச் செய்ய முடியாவிட்டாலும் நேரக் கட்டுப்பாடுகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வர்த்தகம் துவங்கப்பட்டு உள்ள காரணத்தால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.