உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோகரன்சிக்குப் பின்னால் சுற்றி வரும் நிலையில் பல முன்னணி முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள், நிறுவனத் தலைவர்கள் எனப் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியா உட்படப் பல நாடுகள் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யாமல் ஒழுங்கு முறைப்படுத்த முடிவெடுத்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைவரும், தமிழருமான சுந்தர் பிச்சை பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியமான கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
சுந்தர் பிச்சை
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய இரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை சிங்கப்பூரில் நடந்த ப்ளூம்பெர்க் நியூ எகானமி போர்ம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இப்போது தான் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
கிரிப்டோகரன்சி
உலகில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டமாக விளங்கி வரும் கிரிப்டோகரன்சியில் சுந்தர் பிச்சை முதலீடு செய்துள்ளாரா எனக் கேட்கப்பட்டது. அதற்குச் சுந்தர் பிச்சை கிரிப்டோகரன்சியை வாங்கியிருக்கலாம், ஆனால் பல முறையில் முதலீடு செய்ய முடிவெடுத்துப் பின்வாங்கியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க், ஜேக் டோர்சி
தற்போது உலகளவில் பல முன்னணி முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இதுமட்டும் அல்லாமல் எலான் மஸ்க், டெஸ்லா, டிவிட்டர் ஜேக் டோர்சி எனப் பல முன்னணி நிறுவனத் தலைவர்களும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்க திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
2 டிரில்லியன் டாலர் மதிப்பீடு
சமீபத்தில் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆலபபெட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எந்தப் பிரிவில் இருந்து ஆல்பபெட் நிறுவனம் பெற போகிறது என்ற கேள்வியும் சுந்தர் பிச்சை-யிடம் முன்வைக்கப்பட்டது.
சுந்தர் பிச்சை பதில்
இதற்குச் சுந்தர் பிச்சை எவ்விதமான தயக்கமும் இல்லாமல் நிறுவனத்தின் கோர் சர்வீசஸ்-ல் இருந்து தான் எனப் பதில் அளித்தார். தனது சக போட்டி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தில் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வரும் நிலையில் ஆல்பபெட் இன்னமும் சர்ச் வர்த்தகத்திலேயே உள்ளது எனச் சந்தேகம் வரலாம், அதற்குப் பதில் அளித்துள்ளார் சுந்தர் பிச்சை.
சர்ச் வர்த்தகம்
நாளுக்கு நாள் மக்கள் அதிகளவில் தேடல்களைச் செய்து வருகின்றனர், குறிப்பாக வாய்ஸ் மோடு வாயிலாகத் தகவல்களைச் சர்ச் செய்து வருகின்றனர். இதனால் கூகுள் தளத்தில் எப்போதும் இல்லாத வகையில் மறுசீரமைப்புத் தேவைப்படுகிறது.
கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு
இதேபோல் 2015 முதல் கிளவுட் சேவை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் உள்ளது, ஆனால் பெரிய அளவில் முதலீடோ, விரிவாக்கமோ இல்லை. இனி வரும் காலத்தில் கிளவுட், யூடியூப் மற்றும் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் அதிகம் முதலீடு செய்யப்படும் எனச் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.