சுந்தர் பிச்சை-யின் வாரணம் ஆயிரம் ஸ்டைல் காதல் கதை தெரியுமா..? ஆசை காதலி அஞ்சலி பிச்சை..!
உலகின் மிகப்பெரிய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவரும், தமிழருமான சுந்தர் பிச்சை-க்கு 50வது பிறந்தநாள்.
மதுரையில் பெரிய அளவிலான பணம், வசதிகள் இல்லாத குடும்பத்தில் பிறந்து வெறும் கல்வியை மட்டுமே நம்பிய சுந்தர் பிச்சை இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனத்தின் சிஇஓ-வாக உள்ளார்.
இவருடைய வளர்ச்சி பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் இவர் எளிமையாக இருப்பதையே விரும்புவார். இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு ஒரு காதல் கதை இருக்கு தெரியுமா..
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சையின் ஆசை காதல் மனைவியின் பெயர் அஞ்சலி பிச்சை, இவருவரின் முதல் சந்திப்பு பல கோடி காதலர்களைப் போலவே கல்லூரியில் தான். என்ன தான் படிப்பில் கெட்டியாக இருந்தாலும் குபிட்-ன் அம்பு சுந்தர் பிச்சை மீது பாய்ந்தது.
ஐஐடி காரக்பூர் காதல்
ஐஐடி காரக்பூர் கல்லூரியில் சுந்தர் பிச்சை உலோகவியல் பொறியியல் அதாவது metallurgical engineering படித்துக்கொண்டு இருந்த போது அஞ்சலி பிச்சை சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்து வந்தார். கல்லூரி காதல் கதை பெரும்பாலும் வேறு பிரிவில் படிக்கும் மாணவிகள் மீது தான் வரும் இதையும் தான் சராசரி மாணவன் தான் என்று நிரூபணம் செய்துள்ளார் சுந்தர் பிச்சை.
நீண்ட கால நட்பு
சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி பிச்சை பார்த்த உடனே காதல் மலரவில்லை, ஆனால் நீண்ட கால நட்பு அழகான காதலாக இருவருக்கும் மலர்ந்துள்ளது என்பது தான் உண்மை. இதைச் சுந்தர் பிச்சை பல முறை தாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறினோம் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா பயணம்
ஐஐடி காரக்பூர் கல்லூரியில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை அமெரிக்காவிற்கு மேற்படிப்புப் படிக்கப் பறந்தார். சுந்தர் பிச்சை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால் அமெரிக்காவுக்குச் சென்ற சுந்தர் பிச்சை போனில் கூட அஞ்சலி பிச்சை உடன் பேச முடியாத நிலை இருந்தது.
வாரணம் ஆயிரம்
அமெரிக்காவிற்குச் சென்ற சுந்தர் பிச்சை, அஞ்சலி பிச்சை-யிடம் 6 மாதம் பேச முடியாமல் தவித்தார். இந்த 6 மாதத்தில் இருவருக்கும் மத்தியிலான காதல் அதிகரித்தது, அதன் பின்பு அமெரிக்காவிற்குப் பறந்தார் அஞ்சலி பிச்சை. இது கிட்டத்தட்ட வாரணம் ஆயிரம் ஸ்டைல் தான், ஆனால் அமெரிக்கா போனது சமீரா ரெட்டி..!
கல்யாணம்
சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த உடனே வேலையைப் பெற்ற கையோடு அஞ்சலி பிச்சை-யை திருமணம் செய்ய முடிவு செய்தார். உடனே இருவரும் தங்கள் வீட்டில் பேசி கல்லூரி படிப்பை முடித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்துகொண்டனர்.
ஆடம்பர வீடு, இரு பிள்ளைகள்
சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி பிச்சை தற்போது அமெரிக்காவின் முக்கியப் பகுதியான லாஸ் ஆல்டோஸ் மலையில் மிகப்பெரிய ஆடம்பர வீட்டில் வசிக்கின்றனர். இவர்களுக்குக் காவியா பிச்சை மற்றும் கிரன் பிச்சை என இரு பிள்ளைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications