பெங்களூரு: கூகுள் என்று சொன்ன உடனேயே, அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தான் நம் நினைவுக்கு முதலில் வருகிறார். அவர் ஒரு தமிழன் என்கிற வரை நமக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றாலும், அவர் கூகுள் நிறுவனத்தைக் கொண்டு செல்லும் விதமே அலாதியாக இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.
ஒரு நிறுவனத்தில் தனியாக சர்வருக்கு என்று தனி சிஸ்டம் வைத்து, வேலை பார்த்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது.
இப்போது எல்லாமே க்ளவுட் தான். சகலமும், சர்வமும் க்ளவுட் மயமாகிவிட்டது. இப்படி க்ளவுட் வியாபாரம் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, கூகுள் மட்டும் சும்மா இருக்குமா என்ன..?
கூகுள் நிறுவனமும் தன் இரண்டாவது க்ளவுட் ரீஜியனை இந்தியாவில் தொடங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் வரும் 2021-ம் ஆண்டுக்குள் தன் டெல்லி க்ளவுட் ரீஜியனைத் தொடங்க இருப்பதாக கூகுள் சொல்லி இருக்கிறது. கூகுள், ஏற்கனவே இந்தியாவில், மும்பையில் கடந்த 2017-ம் ஆண்டு தன் முதல் க்ளவுட் ரீஜியனைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த டெல்லி க்ளவுட் ரீஜியனில் சேவை தடைபடாமல் இருக்க, மூன்று பிரிவுகள் இருக்குமாம்.
இந்த இரண்டாவது க்ளவுட் ரீஜியனால், கூகுள் நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை இன்னும் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ஏற்கனவே 8 க்ளவுட் ட்ரீஜியன்கள் இருக்கிறதாம். உலக அளவில், கூகுளுக்கு மொத்தம் 22 க்ளவுட் ரீஜியன்கள் இருக்கிறதாம்.
இந்த கூகுள் க்ளவுட் ரீஜியன் தான் கம்பெனிகளுக்குத் தேவையான கூகுள் க்ளவுட் ப்ளாட்பார்ம் சேவைகளை வழங்குகின்றன. இந்த கூகுள் க்ளவுட் ப்ளாட்பார்ம் சேவையை மீடியா, பொழுது போக்கு, சில்லறை வணிகம், உற்பத்தி என பல்வேறு துறை சார்ந்த கம்பெனிகளும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
கூகுளின் க்ளவுட் கட்டுமானங்களிலேயே கூகுள் க்ளவுட் ப்ளாட்பார்கள் ஒரு முக்கிய மைல் கல் என்று சொல்லலாம். இந்த கூகுள் க்ளவுட் ப்ளாட்பார்ம் சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், சிறப்பாக பணியாற்றி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவைகளை வழங்க உதவியாக இருக்கிறதாம்.