உலகின் பிற முன்னணி நிறுவனங்களைப் போலவே கூகுள் 2 வருடங்களுக்குப் பின்பு தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய மிக முக்கியமான இலக்குகளைக் கையில் வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது.
இதனால் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அடுத்தது என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.
கூகுள் நிறுவனம்
ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் மத்தியில் Googlegeist என்ற பெயரில் முக்கியமான ஆய்வை நடத்தும். இதேபோல் இந்த வருடம் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
Googlegeist ஆய்வு
கூகுள் நிறுவனத்தில் நாளுக்கு நாள் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வருடம் Googlegeist ஆய்வு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அந்த வகையில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது சம்பளம், பதவி உயர்வு சரியாக இல்லை என்றும், தங்களது மேனேஜர்கள் தகுதியானவர்களா என்பதில் அதிகப்படியான சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பளத்தில் திருப்தி இல்லை
இந்தச் சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 46% பேர் மட்டுமே தங்களின் மொத்த சம்பளம், அமெரிக்காவில் உள்ள மற்ற நிறுவனங்களில் இதே போன்ற வேலைகளுடன் ஒப்பிடும் போது போட்டித்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நம்புகிறார்கள்- இது கடந்த வருடத்தை விடவும் 12 புள்ளிகள் குறைவு.
வேலைக்கு நிகரான சம்பள உயர்வு
இதோடு 56 சதவீதம் பேர் தங்கள் சம்பளம் "நியாயமான மற்றும் சமமானதாக" உணர்கின்றனர், ஆனால் இது கடந்த வருடத்தைக் காட்டிலும் எட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது, மேலும் 64% ஊழியர்கள் மட்டுமே தங்களின் செயல்திறன் சம்பள உயர்வில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர், இதுவும் கடந்த வருடத்தை விடவும் மூன்று புள்ளிகள் சரிவு.
டெக் துறை
இன்று டெக் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் நிலையில், அனைத்து துறையிலும், அனைத்து பிரிவுகளிலும் ஊழியர்களுக்கு வாய்ப்புகள் குவிந்துக் கிடக்கிறது. இதனாலேயே இந்த வருடம் கூகுள் ஊழியர்கள் ஆய்வில் சம்பளம், பதவி உயர்வு பிரிவில் ஊழியர்கள் திருப்தி இல்லை என பதில் அளித்துள்ளனர்.
சுந்தர் பிச்சை
இந்த ஆய்வை ஜனவரி மாதம் செய்யப்பட்ட நிலையில் இதன் முடிவுகளைத் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, முடிவுகளை அறிவிக்கும் வகையில் சுருக்கமாகத் தனது மின்னஞ்சலில் ஊழியர்களிடம், இந்தக் கணக்கெடுப்பு நிறுவனத்தில் ஊழியர்கள் எந்த அளவிற்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்பதை அளவிடும் மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும் என்று கூறினார்.
அமெரிக்க நிறுவனங்கள்
பொதுவாக அமெரிக்க நிறுவனங்களில் குறிப்பாகப் பெரு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம், பங்குகள், விடுமுறை, அலுவலகத்தில் உயர் தரமான உணவு, இலவசமாகக் கருவிகள் எனப் பல சலுகைகளை வாரி வழங்குகிறது.
இந்திய நிறுவனங்கள்
ஆயினும் ஊழியர்களின் மனநிலை மற்றும் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான விருப்ப தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்கிறது. ஆனால் இந்திய நிறுவனங்களில் தலைகீழாக உள்ளது, பெரும்பாலான நிறுவனத்தில் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதே இல்லை, அப்படிச் செய்தாலும் வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே செய்யப்படுகிறது.
உங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற ஆய்வு செய்து, மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்களா..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications