இந்தியாவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்பட ஒரு சில நிறுவனங்கள் இ-காமர்ஸ் மூலம் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்து வருகிறது.
இதனை அடுத்து இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் சில நிறுவனங்களை இ-காமர்ஸ் வணிகம் செய்ய இந்திய அரசு அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் அமேசான் மற்றும் வால்மார்ட் ஆதிக்கம் அதிகம் இருப்பதை அறிந்த மத்திய அரசு கடந்த மாத இறுதியில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் குறித்த ஆலோசனையை செய்தது.
இ-காமர்ஸ் வணிகம்
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 மில்லியன் விற்பனையாளர்களையும், 10 மில்லியன் வணிகர்களையும் ஆன்லைனில் இணைக்க முடியும் என இந்திய அரசு நம்புகிறது. மேலும் இ-காமர்ஸ் வணிகத்தில் இந்தியாவின் சில பெருநகரங்கள் மற்றும் 100 நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூகுள்
கூகுள் நிறுவனம் தற்போது கூகுள்பே என்ற பண பரிவர்த்தனை செயலியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை கூகுள்பே பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இ-காமர்ஸ் வணிகத்தில் இறங்கினால் அந்த நம்பிக்கையை காப்பாற்றலாம் என்று கூகுள் நம்புகிறது. ஆனால் அதே நேரத்தில் இ-காமர்ஸ் வணிகம் குறித்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை அந்நிறுவனம் வெளிப்படையாக இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.
இ-காமர்ஸ் சேவையில் கூகுள்
இந்தியாவில் கூகுள் நிறுவனம் இ-காமர்ஸ் சேவையில் ஈடுபட தொடங்கினால் அமேசான், ஃப்ளிப்கார்ட் உட்பட ஒரு சில நிறுவனங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
லாபம்
கூகுள் நிறுவனம் நேர்மையாகவும் பயனர்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் நிறுவனம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் உள்ளது என்றும், லாப நோக்கம் இருந்தாலும் அதில் லாபத்தின் சதவிகிதம் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இந்தியர்களிடம் உள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
எனவே கூகுள் நிறுவனம் இந்தியாவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடம் உள்ள நிலையில் கூகுள் இதுகுறித்து என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.