உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் ஈகோசிஸ்டத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து, அதன் மூலம் அதிகளவிலான மக்களை இண்டர்நெட் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தான் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்
இந்தியா வேகமாக வளரும் ஒரு டிஜிட்டல் சமூகத்தைக் கொண்டு உள்ள காரணத்தால் டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது. ஜியோ நிறுவனத்திலும் இவ்விரு நிறுவனங்கள் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.
கூகுள் - ரிலையன்ஸ் ஜியோ
கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 34,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்தது. இந்நிலையில் தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பார்தி ஏர்டெல் மற்றும் கூகுள்
இந்த முதலீட்டுக்காகப் பார்தி ஏர்டெல் மற்றும் கூகுள் ஆகியவை கிட்டதட்ட 1 வருடத்திற்கும் அதிகமான காலத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜியோ நிறுவனத்தில் கூகுள் செய்த முதலீட்டுக்கு இணையான முதலீடு அல்லது அதற்கு அதிகமான தொகையை முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு
ரிலையன்ஸ் ஜியோ சுமார் 4.36 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டது, ஆனால் ஏர்டெல் நிறுவனம் மதிப்பு குறைவாக இருக்கும் காரணத்தால் கூகுள் முதலீடு செய்வதன் மூலம் சற்று கூடுதலான பங்குகளைப் பெற வாய்ப்பு அதிகம். இது கூகுள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு.
ஏர்டெல் நிறுவனத்தின் கடன்
ஏர்டெல் நிறுவனத்திற்கு ஏற்கனவே 1.7 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் முதலீடு பெரும் வாய்ப்பாக அமையும். இதேபோல் அதீத கடனில் இருக்கும் காரணத்தால் ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தகம் சரிந்தால் கூகுள் நிறுவனத்தின் முதலீட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
கூகுள் திட்டம்
கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு Digitisation fund திட்டத்திற்காகச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாக இண்டர்நெட் சேவையை அளிக்க வேண்டும், இதன் மூலம் தனது வர்த்தகத்தையும் வருமானத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது கூகுள் நிறுவனத்தின் திட்டம்.