இந்தியா முழுவதும் லட்ச கணக்கான மக்கள் இந்தப் போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல் மன நிம்மதி இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் கூகுள் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கூகுள் நிறுவனம் ஜனவரி முதல் இந்தியா பிளே ஸ்டோரில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட லோன் ஆப்-களை விதிமுறைகளை மீறியதற்காகவும், கேள்விக்குரிய மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆஃப்லைன் பிகேவயர் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நீக்கியுள்ளது.
கூகுள் மூத்த அதிகாரி
கூகுள் APAC (Asia Pacific region) இன் டிரஸ்ட் மற்றும் சேஃப்டி பிரிவின் மூத்த இயக்குனரும், தலைவருமான சாய்கத் மித்ரா கூறுகையில், நிறுவனம் செயல்படும் அனைத்து அதிகார வரம்புகளிலும் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க உறுதியாக உள்ளது. மேலும் ஆன்லைன் சேவைகளில் தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்கள் தற்போது "உலகளாவிய நிகழ்வு" ஆக உள்ளது.
மோசடிகள்
ஆன்லைனில் நடக்கக் கூடிய மோசடிகள், தீங்குகளைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் நிறுவனங்கள் போதுமான அளவு செயல்படவில்லை என்றும், புதிய விதிமுறைகள் வருவதை அமல்படுத்தத் தள்ளிப்போடுகின்றன என்றும் விளக்கம் கொடுத்தார் சாய்கத் மித்ரா. கூகுளின் முன்னுரிமையும் அதன் முக்கிய மதிப்புகளும் எப்போதும் பயனர் பாதுகாப்பைச் சுற்றியே இருப்பதாக மித்ரா வலியுறுத்தினார்.
கடன் செயலிகள்
இந்தியாவில் பல மோசடி கடன் செயலிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புகார்களுக்கு எதிராகச் சைபர் காவல் துறையினரிடமும் மகாராஷ்டிரா உட்படப் பல மாநிலங்களில் எக்கச்சக்கமான நிறுவனங்கள், ஊழியர்கள் சிக்கியுள்ள நிலையில், மோசடி செய்வே உருவான கடன் செயலி நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்க மாற்று வழியாகச் சமுக வலைத்தளத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இத்தகைய டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோசடிகளும், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் வேளையிலும் அதை முறைப்படுத்தும் விதமாக முக்கிய விதிமுறைகளைச் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
நிர்மலா சீதாராமன்
இதற்கிடையில் சந்தேகத்திற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிஜிட்டல் கடன் செயலிகள் மற்றும் அவற்றை அமைக்கவும், இயக்கவும் உதவிய இந்தியர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் சில நாட்களுக்கு முன்பு பேசும்போது தெரிவித்தார்.
சீனா
கடன் சந்தையில் நுகர்வோர் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் சீனா-வில் டிஜிட்டல் கடன் பிரிவு என்பது மிகப் பெரியதாக உள்ளது. சொல்லப்போனால் அரசால் கூட இந்த டிஜிட்டல் கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தான் தற்போது சீனாவில் உள்ளது.
இந்தியா முடிவு
இதனால் சீனாவில் பல தனியார் நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிய அளவிலான வளர்ச்சியையும், லாபத்தையும் அடைந்திருந்தாலும், இந்தியா இத்துறையை ஊக்குவிக்க விருப்பம் இல்லாமல் தான் உள்ளது. இதற்காகவே மத்திய அரசும், நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும், சைபர் காவல் துறை அதிகாரிகளும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.