2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா மூலம் இந்தியா தவித்து வந்த நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் சுமார் 3,24,432 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றது.
இப்படி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தில் முதலீடு செய்த பல முன்னணி நிறுவனங்களில் உலகின் டாப் டெக் நிறுவனமான கூகுள் நிறுவனமும் ஒன்று.
கூகுளின் 4.5 பில்லியன் டாலர் முதலீடு
சுமார் 4.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது கூகுள், ரிலையன்ஸ் உடன் இணைந்து மலிவான விலை 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியது.
விநாயகர் சதுர்த்தி தினம்
இந்நிலையில் இன்று நடந்த 44வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி, கூகுள் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணியில் உருவான 4ஜி ஸ்மார்ட்போன் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தித் தினத்தில் அதாவது செப் 10ஆம் தேதியன்று அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜியோபோன் நெக்ஸ்ட்
ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்த 4ஜி ஸ்மார்ட்போன் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ்-ன் 500 ரூபாய் போன் நினைவிருக்கா..? அதைவிடவும் பிரம்மாண்டமாக இந்த 4ஜி ஸ்மார்ட்போன் திட்டத்தைச் செயல்படுத்த ஜியோ திட்டமிட்டு உள்ளது.
கூகுள் மற்றும் ஜியோ பெரிய லாபம்
கூகுள் மற்றும் ஜியோ இணைந்து தயாரித்துள்ள இந்த JioPhone Next 4ஜி ஸ்மார்ட்போன் 2ஜி சேவையில் இருக்கும் பல கோடி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் போனில் ஜியோ சேவைகள் மட்டும் அல்லாமல் கூகுள் நிறுவன சேவைகளும் இருக்கும் காரணத்தால் இரு தரப்புக்கும் இது பெரிய லாபத்தை அளிக்கக் கூடியது.
மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்
JioPhone Next 4ஜி ஸ்மார்ட்போன் விலை குறைவாக இருந்தாலும் இதில் வாய்ஸ் அசிஸ்டென்ட், மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம், ஸ்மார்ட் கேமரா, ஆக்யுமென்டெட் ரியாலிட்டி பில்டர் இன்னும் பல சேவைகள் இருப்பதால் சந்தையில் இருக்கும் பட்ஜெட் போன்களை ஒப்பிடுகையில் எவ்விதமான தர குறைப்பாடும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் சுந்தர் பிச்சை
44வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்த JioPhone Next 4ஜி ஸ்மார்ட்போனுக்கான ஆண்டிராய்டு தொழில்நுட்பத்தை மிகவும் பிரத்தியேகமாக இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு வர்த்தகம்
சாமானிய மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த கூகுள் - ரிலையன்ஸ் இணைந்து உருவாக்கிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தித் தினத்தில் அதாவது செப் 10ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படுவதால் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்க உள்ளது.
ஜியோ 5ஜி சேவை
இதுமட்டும் அல்லாமல் ஜியோ இந்த வருடத்தின் இறுதிக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், ஜியோ-வின் சேவை அனைத்தும் பெரிய அளவில் மேம்படுத்தக் கூகுள் கிளவுட் சேவையுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது.
ஜியோ மைக்ரோசாப்ட் டேட்டா சென்டர்
இதோடு மைக்ரோசாப்ட் உடன் இணைந்து 10MW ஜியோ - அசூர் கிளவுட் டேட்டா சென்டரை இயக்க உள்ளது. இந்த டேட்டா சென்டர் மூலம் இந்தியா முழுவதும இருக்கும் சிறு வர்த்தகங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கிளவுட் சேவை அளிக்க உள்ளதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.