கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி வேலை செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும் விரைவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் நிர்வாகிகள் விரைவில் கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மறைமுகமாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம்
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் வட்டாரங்களிலிருந்து வந்த தகவலின் படி இந்த ஆண்டு முழுவதுமே புதிய ஆட்களை வேலைக்கு எடுப்பது சந்தேகம்தான் என்று கூறப்பட்டு வருகிறது.
ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்தும் அவர்களது திறமை குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவன நிர்வாகிகள், 'கூகுள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னேற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அனைத்து ஊழியர்களும் திறமையாக பணியாற்ற வேண்டும் என்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை
உற்பத்தி திறன் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி உள்ள கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, 'பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை நடைபெறவில்லை என்றும், பலர் திறமையாக வேலை செய்யவில்லை என்றும் வேலையில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இது ஆட்குறைப்புக்கான மறைமுக கருத்து என்பதால் கூகுள் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் அச்சம்
கூகுள் நிறுவனத்தின் புதிய பணியமர்த்தல் இல்லாத காரணத்தினால் தங்களுக்கு மிக விரைவில் மோசமான செய்தி வெளிவரலாம் என பணி நீக்கம் குறித்து ஊழியர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன காரணம்?
கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை என்பதுதான் என கூறப்படுகிறது. கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் 13 சதவீதம் குறைந்து இருப்பதே கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மறுசீராய்வு
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்னுரிமை வாய்ந்த பணியாளர்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து ஊழியர்களின் வேலை தரம் குறித்து ஆய்வு செய்து, மறுசீராய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணியாளர்கள் நீக்கம்
செலவை குறைப்பது உள்பட ஒருசில காரணங்களை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள தங்களது கிளைகளில் ஒரு சில பணியாளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் கூகுள் நிறுவன பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.