டெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டிய AGR நிலுவைத் தொகையை விரைவில் செலுத்துமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இது குறித்து தொலைத்தொடர்பு துறை, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் எழுதிய கடிதத்தில், நிறுவனங்களின் விவரங்களையும், விளக்கங்களையும் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசு மதிப்பிட்டுள்ள தொகை 1.46 லட்சம் கோடி ரூபாய் நிலுவை தொகைக்கு எதிராக இதுவரை, சுமார் 26,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏஜிஆர் நிலுவை
இதில் வோடபோன் ஐடியா 53,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவையில், இதுவரையில் வெறும் 3,500 கோடி ரூபாய் நிலுவையை செலுத்தியுள்ளது. அதன் வங்கி உத்திரவாதங்கள் ஓரளவு அதன் நிலுவைத் தொகையை மீட்டெடுக்க பயன்படுத்தப்பட்டால் மீட்டெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதன் ஏஜிஆர் நிலுவைத் தொகையில் ஏதும் நிவாரணம் பெறாவிட்டால் வோடபோன் நிறுவனம் அது மூடப்படலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
அழுத்தம் காணலாம்
இப்படி ஒரு நிலையில் அரசு தரப்பில் விரைவில் நிலுவையில் உள்ள ஏஜிஆர் தொகையை செலுத்த கூறி, தொலைத் தொடர்பு நிறுவனங்களை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்கனவே அழுதத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இன்னும் பிரச்சனைகளை காணலாம் என்றும் கூறப்படுகிறது.
எவ்வளவு பாக்கி உள்ளது?
அரசு அறிக்கையின் படி, வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் 49,538 கோடி ரூபாய் நிலுவையும், ஏர்டெல் நிறுவனம் 27,740 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும், டாடா நிறுவனம் 11,625 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும், இதே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 21,135.6 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிக்கலில் இருந்து மீண்டு வருமா?
ஏற்கனவே நிலுவைத் தொகையை செலுத்த அரசு கால அவகாசம் கொடுத்தும் அதனை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியாத நிலையில் தான், இந்த நிறுவனங்கள் தற்போது அரசின் உதவியை நாடியுள்ளன. எனினும் தற்போது இருக்கும் நிலையில் இந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்குமா? சிக்கலில் உள்ல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விரைவில் மீண்டு வருமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.