கடந்த நவம்பர் 08, 2016 இரவை நம்மில் பலரும் மறந்து இருக்கமாட்டோம். பணமதிப்பு இழப்பு (Demonetization) என்கிற சொல்லையே, நம்மில் பெரும்பாலான மக்கள் அன்று தான் தெரிந்து கொண்டோம்.
அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தான் இந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் அறிமுகமாயின.
ஆனால் இப்போது இந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் மீதே பல சர்ச்சைகளும், வதந்திகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அச்சடிக்கவில்லை
இதில் புதிதாக ஒரு தகவலும் கிடைத்து இருக்கிறது. தற்போதைய 2019 - 20 நிதி ஆண்டில், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க, அரசு ஆர்டர் கொடுக்கவில்லை என்கிற செய்தியும் கிடைத்து இருக்கிறது. என்னங்க சொல்றீங்க, திரும்ப 2,000 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் செல்லாது கில்லாதுன்னு ஏதாவது சொல்லப் போறாங்களா..? என பலரும் ஒரு பதற்றத்தில் தான் இருக்கிறார்கள்.
அமைச்சர் பதில்
இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் விதத்தில், மத்திய இணை நிதி அமைச்சர் அனுராக் தாகூர் பாராளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக ஒரு பதிலைக் கொடுத்து இருக்கிறார். அப்படி என்ன கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அமைச்சர் பெருமகனார் என்ன பதில் கொடுத்தார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கேள்வி
மத்திய அரசு, புதிதாக வெளியிட்ட (ரோஸ் நிற) 2,000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்கவோ அல்லது, பிரிண்ட் செய்வதை நிறுத்தவோ இருக்கிறதா..? என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த கேள்விக்கு தான் அமைச்சர் எழுத்துப் பூர்வமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
பதில்
இந்த நடப்பு 2019 - 20 நிதி ஆண்டில், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களை பிரிண்ட் செய்ய, அரசு ஆர்டர் கொடுக்கவில்லை. ஆனால், 2,000 ரூபாய் நோட்டுக்களை பிரிண்ட் செய்வதை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை எனச் சொல்லி இருக்கிறார் அனுராக் தாகூர்.
திட்டம் இல்லை
அதோடு இந்திய பொருளாதாரத்தின் புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுக்களை நீக்குவது தொடர்பாகவும் எந்த ஒரு திட்டமும் அரசுக்கு இல்லை எனத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் அமைச்சர். இந்திய பொருளாதாரத்தில் சுமார் 7.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு 2,000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறதாம்.
எங்கே இருக்கிறது
மார்ச் 05, 2020 நிலவரப்படி, மொத்தம் 7.4 லட்சம் கோடி ரூபாயில் 5.49 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் தான் இருக்கிறது. மீதமுள்ள 0.93 லட்சம் கோடி ரூபாய் கரன்ஸி செஸ்ட் (Currency Chest) என்று சொல்லப்படுகிற பணக் கிடங்கில் பாதுகப்பாக இருக்கிறதாம்.
எஸ்பிஐ & இந்தியன் பேங்க்
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் வருவதைக் குறைத்து, 500 & 200 ரூபாய் நோட்டுக்கள் வரும் விதத்தில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் பேங்க் ஆகிய வங்கிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.