அரசு கடந்த சில மாதங்களாகவே சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க தீவிர முயற்சியினை எடுத்து வருகின்றது. இடையில் கொரோனா சற்று இடையூறுகளை தந்தாலும், அரசு தனது வேலையில் மிக தீவிரமாக இருந்து வருகின்றது.
ஒரு புறம் பணமாக்குதல் திட்டம் மூலம் சில லட்சம் கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், மறுபுறம் ஏர் இந்தியாவினை எப்படியாவது தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாய் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் அரசின் இந்த பணமாக்குதல் திட்டம் மூலம் 25 விமான நிலையங்களின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் திரட்ட திட்டமிட்டுள்ளது.
டிசம்பரில் ஒப்படைக்கலாம்
இதற்கிடையில் பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை, அடுத்த மாதம் ஏலத்தில் விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைக்கப்படலாம் என முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
பிபிசிஎல் தனியார்மயம்?
இதற்கிடையில் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான பிபிசிஎல் நிறுவனத்தின், பங்கு விற்பனையானது, நடப்பு நிதியண்டின் இறுதிக்குள் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலமும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு உத்தரவாதம்
இதற்கிடையில் ஏர் இந்தியா கெய்ர்ன் எனர்ஜிக்கு இடையிலான பிரச்சனை என்பது முதலீட்டாளர்கள் உணர்வை மாற்றிவிடாது. தேவைப்படும் பட்சத்தில் அரசு ஏர் இந்தியா ஏலதாரர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கெய்ர்ன் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. கெய்ர்ன் பிரச்சனை இப்போது முடிந்து விட்டது. அமெரிக்க நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பும் இந்திய பகுதியில் அமல்படுத்தப்படாது என ஆதாரங்கள் கூறுகின்றன.
என்ன வழக்கு அது?
கெய்ர்ன் எனர்ஜி அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு கிடைக்கவேண்டிய, 1.2 பில்லியன் டாலர் தொகைக்காக, இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்துக்களைக் கைப்பற்றுவதாக அறிவித்தது. கெய்ர்ன் எனர்ஜிக்கு நடுவர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் படி நஷ்டஈடு தொகை, வட்டி, அபராதம் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் இந்திய அரசு சுமார் 1.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெருத்த கடன் பிரச்சனை
பெருத்த கடன் பிரச்சனையால் தவித்து வரும் ஏர் இந்தியா, ஒரு காலகட்டத்தில் எரி பொருளுக்கான கட்டணத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. ஏன் ஒரு சில கட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுக்க முடியாமல், கடன் பிரச்சனையால் தவித்தது ஏர் இந்தியா, ஏற்கனவே பல ஆயிரம் கோடி கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்கு விற்பனை திட்டம்
தனியார்மயமாக்கல் திட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஏர் இந்தியாவின் கணிசமான பங்குகளை அரசு வைத்து கொண்டு, மீத பங்குகளை மட்டுமே விற்க திட்டமிட்டது. ஆனால் கடனில் உள்ள இந்த நிறுவனத்தினை வாங்க யாரும் முன்வராததால், ஏர் இந்தியாவின் முழு பங்கினையும் தனியார்மயமாக்கும் முடிவுக்கு அரசு வந்தது.
பலரும் வேலையிழக்கும் அபாயம்
ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க விட்டால் இந்த நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக இந்த நிறுவனம் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது. இப்படியொரு நிலையில் தான் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது ஏலம் விடும் அளவுக்கு தனியார்மய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.