மத்திய அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் (EV), ஹைட்ரஜன் மற்றும் இயற்கை எரிவாயுவில் (CNG/LNG) இயங்கும் வணிக ரீதியிலான வாகனங்களின் பயன்பாட்டு காலத்தை நீட்டிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
தற்போதுள்ள தேசிய அனுமதி பெற்ற வணிக வாகனங்களுக்கான வயது வரம்பு, இந்த புதிய திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட உள்ளது. இதன்படி, தற்போது 12 மற்றும் 15 ஆண்டுகளாக உள்ள வயது வரம்புகள், முறையே 17 மற்றும் 20 ஆண்டுகளாக உயரும். சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவான வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான வாகன உரிமையாளர்கள், புதிய தொழில்நுட்ப வாகனங்களை வாங்கும்போது ஏற்படும் ஆரம்பக்கட்ட செலவுகளை ஈடுகட்ட இந்த கூடுதல் காலம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான தேசிய அனுமதி நடைமுறைகளை எளிமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இனி விண்ணப்பங்கள் Form 46 மற்றும் அனுமதிச் சீட்டுகள் Form 47 மின்னணு முறையில் மட்டுமே வழங்கப்படும்.
இதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் அனுமதி சீட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தது. இனி, விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால், ஒரே நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு மின்னணு முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான கட்டணம் ஆண்டுக்கு 16,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 5 ஆண்டுகளுக்கான கட்டணமாக 82,500 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாகன ஆவணங்கள் மற்றும் உரிமையாளர் விவரங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் காகித பயன்பாட்டை குறைக்கவும், ஆவணங்களை எளிதாக பெறவும் வாகன் போர்ட்டல் பயன்படுத்தப்பட உள்ளது. டீலர்ஷிப் சான்றிதழ் அல்லது வாகன பதிவு எண் வழங்கப்பட்டவுடன், மற்ற விவரங்கள் தானாகவே பதிவேற்றப்படும்.
வாகன உரிமையாளர்கள் படிவம் 20-இல் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு அறிவிப்பை அரசு ஏற்கனவே ஆகஸ்ட் 10 அன்று வெளியிட்டுள்ளது. இதற்கான ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு இதற்கான இறுதி அறிவிக்கையை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்ட பிறகு, இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பு தேசிய அனுமதி பெற்ற குறிப்பிட்ட வணிக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், அனைத்து வாகனங்களுக்கும் இது பொதுவானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

