வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தில் தொடர்ந்து பல குளறுபடிகள் இருந்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு வருமான வரித்துறையானது சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் புதிய தளத்தில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்ய செப்டம்பர் 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சர் காலக்கெடு விதித்துள்ளார்.
வருமான வரி தாக்கல் தொடர்பான புதிய போர்டலில் தொடர்ந்து குறைபாடுகள் இருந்து வந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீப் பரேக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து குளறுபடிகள்
கடந்த ஜூன் மாதம் முதல் புதிய வருமான வரி தளமானது செயல்பட்டு வந்தது. ஆனால் ஆரம்பம் முதல் கொண்டே பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதிகளில் வலைதளம் முற்றிலும் செயல்படாமல் போனது.
ட்விட்டரில் கருத்து
இதற்கிடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து, சமூக வலைதளத்தில் பலரும் புதிய தளத்தில் உள்ள சிக்கல்களை கூறி வந்தனர். பலரும் மிக எளிமையான விஷயங்களை கூட செய்ய கடினமாக இருப்பதாகவும், இன்னும் சிலர் போர்டல் மிக மெதுவாக இருப்பதாகவும், பலர் போர்டலில் உள்ள பிரச்சனைகளை ஸ்கீரின் ஷாட்களாக போட்டும் கூறி வந்தனர்.
கோடிக் கணக்கில் செலவு
வருமான வரி தாக்கலை இன்னும் எளிமைபடுத்தும் வகையில், மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க இந்த புதிய தளமானது உருவாக்கப்பட்டது. இதற்காக அரசு இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு 164.5 கோடி ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை
இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து ICAIவும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக கூறிய இணை அமைச்சர், நிச்சயம் விரைவில் முன்னேற்றம் இருக்கும். இதில் உள்ள பிரச்சனைகள் விரைவாக தீர்க்கப்படும். இதற்காக வருமான வரித்துறை இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சர் கருத்து
பயனர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, போர்டல் இந்த நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனை திட்டமிட்டபடி விரைவில் சரிசெய்து நடைமுறைக்கு கொண்டு வருவோம். பயன்படுத்த மிக எளிதானதாக கொண்டு வருவோம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இன்ஃஃபோசிஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
டிஜிட்டல் வளர்ச்சி
ஆக குளறுபடிகள் சரி செய்யப்பட்டு விரைவில் சரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவித்து வரும் நிலையில் வருமான வரித்துறையில் ஏற்கனவே பல அம்சங்களை உட்புகுத்தியுள்ளது. ஆன்லைனில் பயனர்களே வருமான வரி தாக்கலை செய்து கொள்ளும் அளவுக்கு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறப்பானதொரு போர்டல்
தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தளத்திலும் பற்பல சேவைகளை பெற்றுக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக இதில் உள்ள பிரச்சனைகள் களையப்படும் பட்சத்தில் அது பயனர்களுக்கு மிக சிறப்பானதொரு போர்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து குளறுபடிகளும் செப்டம்பர் 15க்குள் தீர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.