வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தில் தொடர்ந்து பல குளறுபடிகள் இருந்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு நிதியமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
வருமான வரி தாக்கம் தொடர்பான புதிய போர்டலில் தொடர்ந்து குறைபாடுகள் இருந்து வருகின்றது. இதனை சரி செய்ய இன்ஃபோசிஸ் நிறுவனமும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.
எனினும் தொடர்ந்து நிலவி வரும் இந்த குளறுபடி காரணமாக மத்திய நிதியமைச்சகம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீப் பரேக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.
ஏன் இந்த குளறுபடிகள்
இது குறித்து வருமான துறையானது தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரி இணையதளம் தொடங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றளவும் இந்த தளத்தில் குளறுபடிகள் நீடித்து வருகின்றது. இதுவரையில் இதனை சரி செய்யாதது குறித்து விளக்கமளிக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விளக்கம் கொடுங்கள்
இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் இன்று, நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கலை இன்னும் எளிமைபடுத்தும் வகையில், மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க கடந்த ஜூன் மாதம், புதிய வருமான வரி தளமானது செயல்பாட்டு வந்தது. ஆனால் ஆரம்பம் முதல் கொண்டே பல்வேறு குளறுபடிகள் இருந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் தான் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
பல கோடி செலவு
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வருமான வரி தாக்கலுக்காக இந்த இணையதளத்தினை உருவாக்க, அரசு இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு 164.5 கோடி ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு கோடிகள் செலவு செய்தும் தற்போது வரையில் ஏதேனும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி வரும் இந்த தளம் குறித்து, இன்று பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
அவசர பராமரிப்பில் போர்டல்
கடந்த 21ம் தேதி முதல் கொண்டு வருமான வரி போர்டலில் அவசர பராமரிப்பில் உள்ளதாக கூறப்பட்டது. இதனால் வரி தாக்கல் செய்வோர் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் போர்டலில் ஒரு புதுபிப்பை வெளியிடும் வரையில் சிரமத்திற்கு வருந்துகின்றோம் என்று கூறப்பட்டது. எனினும் சில மணி நேரங்களுக்கு பிறகு போர்ட்டலில், அவசர பராமரிப்பு முடிந்ததாகவும், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று அறிவிக்கப்பட்டது.
ட்விட்டரில் கருத்து
இப்படி புதிய வருமான வரி தளமானது தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து சமூக வலைதளத்தில் பலரும் புதிய தளத்தில் உள்ள சிக்கல்களை கூறி வருகின்றனர். சிலர் சுயவிவரங்களை புதுபிப்பது உள்ளிட்ட எளிமையான பணிகள் கூட கடினமாக இருப்பதாகவும் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் போர்டல் மிக மெதுவாக இருப்பதாகவும், பலர் போர்டலில் உள்ள பிரச்சனைகளை ஸ்கீரின் ஷாட் எடுத்தும் போட்டு வருகின்றனர்.
நிதியமைச்சர் கருத்து
பயனர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக போர்டல் இந்த நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனை திட்டமிட்டபடி விரைவில் சரிசெய்து நடைமுறைக்கு கொண்டு வருவோம். பயன்படுத்த மிக எளிதானதாக கொண்டு வருவோம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னேற்றம் உள்ளது?
இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து ICAIவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றது. ஆக நிச்சயம் வருமான வரி தளத்தில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் இதில் உள்ள பிரச்சனைகள் விரைவாக தீர்க்கப்படும். இதற்காக வருமான வரித்துறை இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது என்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.